9 மாவட்டங்களில் புதிய தோழி விடுதிகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min read
New hostels in 9 districts: Chief Minister M.K. Stalin announces
8.3.2025
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ‘பிங்க் ஆட்டோ’ உள்பட பெண்களுக்கான பல்வேறு சிறப்பு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அதன்படி சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை சார்பில் கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட மகளிர் ‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழா’ நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 250 பெண் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் ‘பிங்க் ஆட்டோ’ சேவையை வழங்கினார். இவர்களுக்கு ஆட்டோக்கள் வாங்க ஒரு லட்சம் ரூபாய் வரை அரசு மானியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக் குழுக்களில் உள்ள மகளிர் பயன்பெறும் வகையில் ரூ.3,000 கோடி மதிப்பீட்டில் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டன.
அதேபோல், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் உள்ளிட்டவற்றை வழங்கி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பித்தார்.
இந்நிலையில் பணிபுரியும் பெண்களுக்காக பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்துவரும் ‘தோழி’ மகளிர் விடுதி திட்டத்தின் விரிவாக்கம் உள்பட மேலும் பல புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளும் இன்று வெளியிடப்பட்டது.
இதன்படி காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, தேனி, கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் ரூ. 72 கோடியில் 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் மகளிர் தின விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
பெண் விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் பெரியார். திராவிட இயக்கத்தின் பேதமே ரத்த பேதம், பால் பேதம் இல்லை என்பதாகும். பெரியார் வழி வந்த அண்ணா, சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கினார்.
பெண்கள் கடமையை செய்ய மட்டும் பிறந்தவர்கள் அல்ல..உரிமையை பெறவும் பிறந்தவர்கள். 9 மாவட்டங்களில் 72 கோடி மதிப்பில் 700 படுக்கை வசதிகளுடன் தோழி விடுதிகள் அமைய உள்ளன. இதன்படி காஞ்சிபுரம், ஈரோடு, சிவகங்கை, தருமபுரி, கரூர், தேனி, கடலூர், ராணிப்பேட்டை, நாகை ஆகிய மாவட்டங்களில் தோழி விடுதிகள் அமைக்கப்படும்.
பெண்களின் உரிமையை உறுதி செய்யும் ஆட்சியாக தி.மு.க செயல்படுகிறது. ஆணாதிக்க மனோபாவம் குறைய வேண்டும். பெண்கள் கடமையை செய்ய மட்டும் பிறந்தவர்கள் அல்ல..உரிமையை பெறவும் பிறந்தவர்கள்” ‘