June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தபசுகுமாரின் கொற்கை வெற்றிவேல் செழியன்/ நாவல்

1 min read

Tapasukumar’s Korkai Vetrivel Chezhiyan/ Novel

8.2.2025
நமது செய்திசாரலில் கண்ணாயிரம் என்ற கற்பனைக் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு நகைச்சுவை தொடர் எழுதி வருபவர் தபசுகுமார். மாலைமலர் பத்திரிகையில் செய்தி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பழனியில் நடந்த முருகன் மாநாட்டில் இவர் படைத்த திருக்குறளில் திருமுருகன் என்ற ஆய்வுக்கட்டுரை ஏற்கப்பட்டு படித்தார்.


இவர் ‘கொற்கை வெற்றிவேல் செழியன்’ என்ற இந்த நாவல் எழுதியுள்ளார். வரலாற்றுக்கதை, வரலாறு திரியாமல் சில கற்பனை பாத்திரங்களை உருவாக்கு சுவையான புதினமாக படைத்துள்ளார்.
கண்ணகியி்ன் வரலாற்றில் இடம்பெற்று அழியாத புகழை தாங்கியவர், பாண்டிய நெடுஞ்செழியன். இவருக்கு ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற பெயர் உண்டு. அவரது மனைவி கோப்பெருந்தேவி. இவர்களுடைய மகனும் இளவரசருமான வெற்றிவேல் செழியன் திறமையையும் சாதனையையும் சொல்வதுதான் இந்த நாவல். இந்த காவியம் எளிய தமிழில் அழகுற அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் கதை படிக்க விறுவிறுப்பாக செல்கிறது.
வரலாற்று நாவல்கள் எழுத கற்பனை வளம், உயிரோட்டமான கதாபாத்திரங்களை கையாளும் திறமை, குழப்பம் இல்லாமலும் தொய்வு இன்றியும் கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு ஆகியவற்றுடன், வரலாறும் விரிவாகத் தெரிந்து இருக்க வேண்டும்.
உண்மையில் நடைபெற்ற நிகழ்வுகளை நூல் பிடித்துச் சென்று, அதிலிருந்து சிறிதும் விலகாமலும், கற்பனை நிகழ்வுகளை வேறுபாடு தோன்றாத வகையில் நேர்த்தியாகக் கலந்தும் கதை சொல்லும் யுக்தி, எளிதில் கைகூடிவிடாது.
இந்த சவாலில் கதை ஆசிரியர் முழு வெற்றி பெற்று இருக்கிறார் என்று உறுதியாகக் கூறலாம்.
பாண்டிய மன்னர்களின் கருவூலத்தை நிரப்புவதற்குக் காரணமாக இருந்த கொற்கை முத்துக்கள், அவை தொடர்பாக நடைபெற்ற கடல் வாணிபத்திற்கு இடையூறாக இருந்த கடற் கொள்ளையர்கள், இளவரசர் வெற்றிவேல் செழியனுக்கு எதிராக அவர்கள் நடத்திய சதித்திட்டங்கள், அவை வெற்றிகரமாக முறியடிக்கப்பட்ட நிகழ்வு ஆகியவற்றுடன், கால் சிலம்புக்காக கோவலன் கொலை செய்யப்பட்டதால் மதுரை நகரை கண்ணகி எரித்த சிலப்பதிகாரக் கதையை கச்சிதமாக ஒருங்கிணைத்து இந்த நாவலை உருவாக்கி இருக்கிறார். அவர் உருவாக்கிய கற்பனை கதாபாத்திரங்களான புயல் பெண் பூங்குழலி, நடனப் பெண் ரதிதேவி போன்றவர்கள் உண்மையில் நடமாடியவர்களா என்று வியக்கும் அளவுக்கு அவர்களை மிகச் சிறப்பாக கதையில் உலாவவிட்டு இருக்கிறார்.
கதை நடைபெற்ற களத்தின் பகுதியில் இருக்கும் ஆதிச்சநல்லூர், ஆறுமுகநேரி, ஆத்தூர், சிவகளை போன்ற பகுதிகளின் சிறப்பு, தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டி ஆகியவற்றையும் நாவலில் தொட்டுக் காட்டி, அந்த மண்ணின் மைந்தர் என்பதையும், வரலாற்றுத் தகவல்களில் ஆழங்கால்பட்டவர் என்பதையும் நிலை நாட்டி இருக்கிறார்.
தமிழக சிறையில் இருந்து தப்பிய கைதிகளை கடற் கொள்ளையர்கள் தங்கள் நாச வேலைக்குப் பயன்படுத்தியது, பாண்டிய படைத் தளபதியின் உள்ளடி வேலை, ஆகியவை கதையை சுவாரசியமாகக் கொண்டு செல்ல சாதுரியமாகப் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பும், அந்த அத்தியாயத்திற்குள் நம்மை ஆர்வத்துடன் இழுத்துச் செல்லும் வண்ணம் உள்ளன.
தக்க இடங்களில் பொருத்தமான பாடல்களைத் தந்து இருக்கிறார். இதை சினிமாவாக எடுத்தால் அந்த பாடல்கள் உதவும் வகையில் கவிதை படைத்துள்ளார்.
கண்ணகியின் சாபத்தால் மதுரை எரிந்தது, கண்ணகியின் சாபத்தைத் தணிக்க கொற்கையில் அவருக்கு சிலை நிறுவி வழிபட்டது வரையிலான நிகழ்வுகளுடன் நாவல் நிறைவு பெறுகிறபோது, இந்த நாவலைப் படிக்கும் நமது மனமும் நிறைவு பெறும்.
இந்த நாவலை பாண்டியன் பப்ளிகேஷன் வெளியிட்டு உள்ளது. விலை: ரூ.380; செல்போன்: 89397 10500

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.