இரட்டை கொலை எதிரொலி: போலீசார் கூண்டோடு இடமாற்றம்
1 min read
Double murder aftermath: Police transferred with cage
9.3.2025
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில் சாராய வியாபாரம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தது மற்றும் சாராய விற்பனையை தட்டி கேட்டது தொடர்பான பிரச்சினை கடந்த மாதம் வெடித்தது.
கடந்த மாதம் 14ம் தேதி இரவு சாராய வியாபாரிகளான ராஜ்குமார், அவரது மைத்துனர்கள் தங்கதுரை, மூவேந்தன் ஆகிய மூவரும் சேர்ந்து முன்விரோதம் காரணமாக தினேஷ் என்பவரை தாக்க முற்பட்டனர். அதனை தடுத்த முட்டம் ஹரிஷ், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த ஹரி சக்தி ஆகியோர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன், முனுசாமி, மஞ்சுளா ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த இரட்டை கொலை சம்பவத்தின் எதிரொலியாக பெரம்பூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நாகவள்ளி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
தொடர்ந்து எஸ்பி. தனிப்பிரிவு போலீஸ் பிரபாகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சப் இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், சங்கர் ஆகியோரும் அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று இரவு பெரம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய 19 போலீசாரை அதிரடியாக கூண்டோடு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பெரம்பூர் போலீஸ் ஸ்டேஷன் உட்பட மாவட்டம் முழுவதும் நிர்வாக வசதிக்காக என மொத்தம் 70 போலீசார் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.