கும்பாபிஷேகம் நடைபெறும் தென்காசி கோவிலில் கலெக்டர் ஆய்வு
1 min read
Collector inspects Tenkasi temple where Kumbabhishekam is being held
20.3.2025
தென்காசி மாவட்டம் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் வரும் ஏப்ரல் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் கோவிலில் திருப்பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் அதுவரை கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஏப். 7ம் தேதி கும்பா பிஷேகம் நடத்த முடிவுசெய்துள்ள கோயில் நிர்வாகம், இதற்காக கால்கோல் விழாவும் நடத்தியுள்ள நிலையில் தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் திருப்பணிகளை முழுமையாக முடித்த பிறகே, குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று கோரிய வழக்கில் வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் உரிய பதில் அளிக்குமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசியைச் சேர்ந்த முத்துராஜ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கு விழா ஏப்.7ம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ஆனால் திருப்பணிகள் எதுவும் முழுமையாக நடைபெறவில்லை.
இந்த கோவிலில் கற்களால் கட்டப்பட்ட கோயில் சுற்றுச்சுவர் சிதிலமடைந்துள்ளது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும். கோயிலில் உட்பகுதியில் தரைத்தளம் தாழ்ந்துள்ளது. சுமார் 500 டிராக்டர்கள் மணல கோயிலில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு உள்ளது. கோபுர விளக்குகளுக்கான பணிகள் முழுமை அடையாமல் உள்ளது. கோயில் தேர் பழுதடைந்து தற்போது இயங்கும் நிலையில் இல்லை. எனவே, கோயில் திருப்பணிகளை முழுமையாக நிறைவேற்றிய பின்னர், குடமுழுக்கு நடத்துமாறு உத்தரவிட வேண்டும். குடமுழுக்கு விழாவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் மனுவிற்கு அறநிலையத் துறை ஆணையர் மற்றும் இணை ஆணையர் உள்ளிட்டோர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
இந்நிலையில் நேற்று தென்காசி மாவட்ட ஆட்சித் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் அன்புமணி, கோயில் நிர்வாக அதிகாரி பொன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஆர்டிஓ லாவண்யா, மற்றும் தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலை தறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் கோயிலுக்கு வருகைதந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கோயில் ராஜகோபுரம், சுவாமி, அம்மன் சன்னதி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே கமல் கிஷோர் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். இதனால் குறிப்பிட்ட தேதியில் கும்பாபிஷேகம் நடைபெறுமா? என்கிற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.