காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
1 min read
Edappadi Palaniswami accuses police of watching with their hands tied
20.3.2025
சட்டசபை கூட்டத்தொடரில் நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நேற்று நடைபெற்ற கொலைச் சம்பவங்கள் குறித்து விவாதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அ.தி.மு.க.வினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நேற்று நடந்த கொலை சம்பவம் குறித்து சட்டசபையில் பேச முற்பட்டேன். அ.தி.மு.க.வை பொறுத்தவரை தமிழக மக்கள் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற முறையில் செயல்படுகிறது. நேரமில்லா நேரத்தில் பேசுவதற்கு எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.
நாள்தோறும் கொலை சம்பவங்கள் அரங்கேறுகின்றன. முதல்வர் தலைமையில் உள்ள காவல்துறை செயலற்ற நிலையில் உள்ளது. குற்ற சம்பவங்களை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. குற்றம் நடந்தால் கைது செய்கிறோம் என அரசு பொறுப்பை தட்டிக்கழிக்கிறது. தினமும் கொலை தொடர்பான அறிக்கையை சமர்பிப்பதுதான் இந்த ஆட்சியின் சாதனையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.