வல்லம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
1 min read
District Collector inspects Vallam Panchayat
21.3.2025
தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டப்படி வல்லம் ஊராட்சி பகுதியில் நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் “ உங்களைத் தேடி உங்கள் ஊரில் “ என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து,“ உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ திட்டத்தின் கீழ் நேற்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே..கமல்கிஷோர், தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டத்திற்குட்பட்ட வல்லம் ஊராட்சி பகுதியில் பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது வல்லம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜமீன் பாத்திமாவிடம் வல்லம் ஊராட்சி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து வல்லம் ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் வல்லம் ஊராட்சி மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் வசதி, சாலை வசதி, பெருவிளக்கு வசதி சுகாதார வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அந்தப் பகுதி பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து வல்லம் ஊராட்சி பகுதியில் பணிகள் சிறப்பாக நடைபெறுவதாக கூறியதோடு வல்லம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜமீன் பாத்திமாவிற்கு பாராட்டு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வல்லம்
ஊராட்சி மன்றத் தலைவர் ஜமீன் பாத்திமா வல்லம் ஊராட்சி பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மிகவும் பழுதான நிலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையை சீரமைக்க வேண்டும்.மேலும் புதிய கட்டிடம், தடுப்பு சுவர் கட்டுதல் , வாறுகால் கட்டும் பணி உள்ளிட்ட பணிகளை செய்திட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதனை நிறைவேற்றி தருவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் உறுதி அளித்தார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சி.ஜெயச்சந்திரன், செங்கோட்டை வட்டாட்சியர் வெங்கடேசன், தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மா.மாணிக்கவாசகம், மாரியப்பன் மற்றும் தென்காசி ஊராட்சி ஒன்றிய சத்துணவு மேலாளர் க.கண்ணன், தென்காசி வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் கண்ணன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.