June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

நான்கு ஆண்டு கால பிரச்சினையை மறைக்க தொகுதி மறு சீரமைப்பு என்ற நாடகம்- எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

1 min read

Edappadi Palaniswami alleges that constituency realignment is a drama to hide a four-year-old issue

23.3.2025
சட்டசபை எதிர்க்கட்சி்த் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம், ஓமலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது;-

2025-26 நிதிநிலை அறிக்கை ஒரு கண்துடைப்பு நாடகமாக தான் பார்க்கப்படுகிறது. இன்னும் இந்த ஆட்சிக்கு 10 மாத காலம் தான் உள்ளது. இந்த 10 மாத காலத்தில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் எதுவும் நிறைவேற்ற முடியாத நிலைதான் ஏற்படும்.
ஏன் என்றால் நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் போடப்பட்டு, பணிகள் தொடங்க வேண்டும் என்பது இயலாத காரியம். இப்போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தேர்தலுக்காக, ஓட்டுகளை பெறுவதற்காக தான் பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் கெட்டு விட்டது. விண்ணை முட்டுகின்ற அளவுக்கு விலைவாசி உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் வீடுகளுக்கு பயன்படுத்துகிற மின் கட்டணம் உயர்வு, தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி, வீட்டுவரி, குடிநீர் உயர்வு என்று எல்லா வகையிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

4 ஆண்டுகாலம் இந்த ஆட்சியில் மிக பிரச்னையாக இருப்பதை எல்லாம் மறைக்க தொகுதி மறு சீரமைப்பு என்ற நாடகத்தை முதல்வர் ஆடுகிறார். தொகுதி மறுசீரமைப்பு நாடாளுமன்றத்தில் கேட்க வேண்டும். இதே தி.மு.க., எம்.பி.,க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்துகின்றனர். அங்கே காங்கிரஸ் எம்.பி.,க்கள் கலந்து கொள்ளவில்லையே?

சென்னையில் பல்வேறு கட்சிகள் தலைவர்கள், மாநில முதல்வர்களை அழைத்து பேசுவது என்பது, தி.மு.க., அரசு மீது மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் என்பதை மடை மாற்றுவதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி.

நாங்கள் மக்களின் பிரச்னைகளைத் தான் கூறுகிறோம். அமலாக்கத்துறை மதுபான விற்பனையில் ரூ.1000 கோடி முறைகேடு என்று ஊடகங்களில் செய்தியை வெளியிட்டுள்ளனர். தி.மு.க., ஆட்சியில் ஊழல் நடைபெற்றுள்ளது என்பது நிரூபணமாகி இருக்கிறது. நாங்கள் சொன்னது எல்லாம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கலால்துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.
அ.தி.மு.க.,வில் சசிகலா, ஓ.பி.எஸ்.,சை சேர்த்துக் கொள்வதாக இப்போது வரைக்கும் எந்த திட்டமும் இல்லை. ராஜ்ய சபா உறுப்பினர் தேர்ந்தெடுக்கும் தேர்தல் பற்றிய அறிவிப்பு வந்தவுடன் யார், யாருக்கு சீட் என்பது தெரிவிக்கப்படும்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தான் ஒரு நிலையாக தெரியும். அ.தி.மு.க.,வை பொறுத்தவரை கொள்கை என்பது வேறு. கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது நிலையானது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைத்து, வாக்குகள் சிதறாமல் ஒன்றாக சேர்த்து அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு தான் கூட்டணி அமைக்கிறோம்.

இவர்கள் (தி.மு.க.,) போல் நிரந்தர கூட்டணி கிடையாது. தி.மு.க., நிலையாக இருப்போம் என்று கூறுகிறார்கள், அப்படி என்றால் ஒரு கட்சியாக இருந்துவிடலாமே? எதற்கு 7 கட்சிகள் கூட்டணி. மக்களின் பிரச்னைகளை எடுத்து வைப்பதற்கு அ.தி.மு.க., என்றுமே சளைத்தது அல்ல. தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி தமிழக பிரச்னைகள் எதை பற்றியும் ஒன்றும் சொல்வது இல்லை.
எவ்வளவு பிரச்னைகள் இருக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை. எதையாவது பேசுகிறார்களா? பல்வேறு தரப்பில் போராட்டம் நடக்கிறது. அந்த போராட்டம் பற்றி கூட கம்யூனிஸ்ட் கட்சி நினைப்பது இல்லை.
இவ்வளவு கொலை நடக்கிறது. 3 மாதத்தில் இவ்வளவு கொலை என்று செய்திகள் வருகிறது. தங்கம் விலை நிலவரம், வெள்ளி விலை நிலவரம் போல கொலை நிலவரம் என்ன என்பது செய்திகளாக வருகிறது.
நாங்கள் அரசின் மீது வேண்டும் என்றே குற்றம் சுமத்தவில்லை. நடந்த தவறுகளை நாங்கள் சுட்டிக்காட்டுகின்றோம். இனி இப்படிப்பட்ட கொலைகள் நடக்காமல் தடுக்க வேண்டும். அது தான் எங்களின் எண்ணம். இன்று எங்கு பார்த்தாலும் கொலை நடக்கிறது.
நெல்லையில் ஜாகிர் உசேன் வழிமறித்து கொல்லப்படுகிறார். 3 மாதம் முன்பே உயிருக்கு ஆபத்து என்று அவர் போலீசில் புகார் தந்துள்ளார். எந்த விசாரணையும் இல்லை. இறப்பதற்கு ஒரு நாள் முன்பு என்னை கொல்வது உறுதியாகிவிட்டது என்று அவர் (ஜாகிர் உசேன்) ஆடியோ வெளியிடுகிறார்.
அப்போதாவது உளவுத்துறை மூலமாக, முதலமைச்சருக்கு தகவல் கொடுத்தோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து இருந்தால் அந்த கொலையை தடுத்து இருக்கலாம். ஆடியோவில் உயிர் போயிடும் என்று அவர் கூறுகிறார். அதை கேட்க துப்பில்லாத அரசாங்கம் தான் விடியா தி.மு.க., அரசாங்கம்.

உங்களுக்கே பாதுகாப்பு இருக்காது. நீங்கள் வீடுபோய் சேர்ந்தால் தான் பாதுகாப்பு. எல்லாத்துக்குமே பாதுகாப்பு கிடையாது. இந்த ஆட்சியில் இன்றைக்கு உயிரோடு இருக்கிறோமா.. ரைட். நாளைக்கு உயிரோடு இருக்கிறோமா என்பது தெரியாது. அப்படிப்பட்ட ஆட்சி தான் தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது.
முதல்வர் ஸ்டாலினுக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இன்றைக்கு இஷ்டமில்லை. ஆகையால் ஏதாவது காரணத்தை சொல்லி தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறார். இதுதான் உண்மை.
2021 தேர்தலின் போது 525 அறிவிப்புகளை வெளியிட்டனர். அதில் 15 சதவீதம் அறிவிப்புகள் மட்டுமே நிறைவேற்றி உள்ளனர். மற்றவை எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. அரசு ஊழியர்களின் சரண்டர் விடுப்பு ரத்து செய்யப்பட்டதற்கு அ.தி.மு.க., காரணம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.
அ.தி.மு.க., ஆட்சியின் போது கொரோனா காலம். அரசு ஊழியர்கள் பணிக்கே வரவில்லை. பணிக்கு வரவில்லை என்பதால் சரண்டர் லீவு கொடுக்க முடியாது. அதன் பிறகே தி.மு.க., ஆட்சிக்கு வருகிறது. அதை அவர்கள் அப்படியே விட்டுவிட்டனர். இதுதான் நடந்த உண்மை. அ.தி.மு.க., ஆட்சியில் சரண்டர் விடுப்பை நிறுத்தவில்லை.

ஆசிரியர்களோ, அரசு ஊழியர்களோ பணிக்கு வராத காரணத்தினால் அவர்களுக்கு சரண்டர் லீவு கொடுக்க முடியாது. இதுதான் நிலைமை. அ.தி.மு.க., ஆட்சியில் கொடுக்கப்பட்ட பல திட்டங்களை நிறுத்தியது தான் தி.மு.க.,வின் சாதனை.
சாத்தியமான திட்டங்களை மட்டுமே தேர்தல் அறிக்கையில் வெளியிடுவோம். இவர்களை போன்று வேண்டுமென்று திட்டமிட்டு, ஆட்சிக்கு வருவதற்காகவே பொய்யான, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துவிட்டு, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பிறகு, அப்படியே அந்தர்பல்டி அடிப்பார்கள்.
ஏன் இவர்களுக்கு தெரியாதா? எங்களின் ஆட்சியில் நடைபெற்ற போராட்டங்களின் போது இவர்கள் போய் போராடியவர்களை பார்த்தார்களே? வாக்குறுதி கொடுத்தார்களே? எல்லாரும் (அரசு ஊழியர்கள்) உருகி போய் ஓட்டு போட்டார்கள். இப்போது என்னாச்சு, காய்ந்து போய் போராட்டம் நடத்துகின்றனர்.

ஒரு அரசாங்கம் என்பது மக்களை காக்கின்ற அரசாங்கமாக இருக்க வேண்டும். அப்படித்தான் எங்களின் அரசாங்கம் இருந்தது. அதனால் தான் மக்களிடம் இன்றைக்கும் செல்வாக்கு குறையாமல் நாங்கள் இருக்கின்றோம்.

இவ்வாறு எடப்பாடிபழனிச்சாமி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.