மதுரையில் ஷிஹான் ஹுசைனின் உடல் நல்லடக்கம்
1 min read
Shihan Hussain’s body buried in Madurai
26.3.2025
மதுரையை பூர்வீகமாக கொண்ட கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி (வயது 60). இவர் இந்தியாவில் இஷின்-ரியூ கராத்தேயின் நிறுவனத் தலைவராகவும், தமிழ்நாடு வில்வித்தை சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு 1.45 மணியளவில் மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து, சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஷிகான் ஹுசைனியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. ஷிகான் ஹுசைனியின் உடல் அருகே அவரது வளர்ப்பு நாய் பீநட் சோகத்துடன் படுத்திருந்தது அங்கு அஞ்சலி செலுத்த வந்தோரின் மனதை மிகவும் நெகிழச்செய்தது.
ஷிகான் ஹுசைனி கராத்தே பயிற்சியாளர், வில் வித்தை பயிற்சியாளர் என்பதை கடந்து சிறந்த ஓவியர், சிறந்த சிற்பி என பன்முகத் திறமையாளர் என்று சொல்வதுடன் செல்லப் பிராணிகளின் பிரியராகவும் இருந்துள்ளார்.
இத்தகைய பன்முகத் தன்மையாளரான ஷிகான் ஹுசைனியின் உடலுக்கு பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து நேற்று மாலை 6 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ஷிகான் ஹுசைனியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆம்புலன்சுக்கு முன்பு கராத்தே வீரர்கள் மற்றும் வில்வித்தை வீரர்கள் இறுதி வணக்கம் தெரிவித்து சிறிது தூரம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பின்னர் ஆம்புலன்ஸ் மதுரைக்கு புறப்பட்டு சென்றது.
இந்நிலையில் மதுரை காஜிமார் தெருவில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்ட ஷிகான் ஹுசைனியின் உடல் இன்று (புதன்கிழமை) இஸ்லாமிய முறைப்படி மதுரை அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.