திருப்பதி கோவிலில் 3 மாதங்களுக்கு வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து
1 min read
VIP break darshan at Tirupati temple cancelled for 3 months
29.3.2025
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை காலங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். தற்போது கோடை காலம் தொடங்க உள்ளதால் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
கோடைகாலத்தில் பக்தர்களின் நெரிசலை கருத்தில் கொண்டு சாதாரண பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் ஜூன் 30-ந்தேதி வரை 3 மாதங்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. பரிந்துரை கடிதங்களின் எண்ணிக்கையை குறைத்து சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.
தற்போது தினமும் வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் 4 ஆயிரம் பேரும், ஸ்ரீவாணி அறக்கட்டளை சார்பில் 1,500 பேரும், நன்கொடையாளர்கள், மெய்நிகர் சிறப்பு தரிசனம் செய்து வருகின்றனர்.
வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆந்திராவில் கோடை வெயிலில் தாக்கும் அதிகரித்து காணப்படுவதால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் அவதி அடைவார்கள்.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், உள்ளூர் அரசியல் கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
திருப்பதியில் நேற்று 65, 569 பேர் தரிசனம் செய்தனர். 21,780 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.15 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 9 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.