தென்காசி மாவட்டத்தில் 2 நாள் உள்ளூர் விடுமுறை
1 min read
2-day local holiday in Tenkasi district
2.4.2025
தென்காசி மாவட்டத்தில் தென்காசி அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பங்குனி உத்திரம் விழாவினை முன்னிட்டு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை விடுவதாக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-
தென்காசி மாவட்டம், தென்காசியில் உள்ள அருள்மிகு காசிவிசுவநாத சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா 07.04.2025 திங்கள்கிழமை அன்றும், பங்குனி உத்திர திருவிழா 11.04.2025 வெள்ளிக்கிழமை அன்றும் நடைபெற உள்ளதை முன்னிட்டு 07.04.2025 திங்கள்கிழமை மற்றும் 11.04.2025 வெள்ளிக்கிமை ஆகிய இரு நாட்கள் தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாட்களாக அறிவித்து ஆணையிடப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட நாட்களில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது என்றும், மேலும், இம்மாவட்ட கருவூலம், சார்நிலைக் கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் தொடர்பான அவசரப்பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 26.04.2025 மற்றும் 03.05,2025 ஆகிய இரு சனிக்கிழமைகளும் தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது.