திருச்சி – தாம்பரம் இடையே வாரத்தில் 5 நாள் சிறப்பு ரெயில்கள்
1 min read
Special trains between Trichy and Tambaram 5 days a week
22.4.2025
கோடை காலத்தையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை தாம்பரம் – திருச்சி இடையே வாரத்தில் 5 நாட்கள் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு வரும் 29-ந் தேதி முதல் ஜூன் மாதம் 29-ந் தேதி வரை காலை 5.35 மணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06190) இயக்கப்படுகிறது. வாரத்தில், செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 5 நாட்கள் இயக்கப்படும் இந்த ரெயில் மதியம் 12.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு வரும் 29-ந் தேதி முதல் ஜூன் 29-ந் தேதி வரை செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 5 நாட்கள் சிறப்பு ரெயில் (06191) இயக்கப்படுகிறது. மாலை 3.45 மணிக்கு தாம்பரத்தில் புறப்படும் இந்த சிறப்பு ரெயில் இரவு 10.40 மணிக்கு திருச்சியை சென்றடைகிறது.
இந்த ரெயில், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்), பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று மதியம் 2.15 மணிக்கு தொடங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.