காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
1 min read
2 terrorists shot dead while trying to infiltrate Kashmir border
23.4.2025
ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் உரி நாலாவில் எல்லை கட்டுப்பாட்டு பகுதி உள்ளது. இங்குள்ள சர்ஜீவன் பொதுப்பகுதி வழியாக 2 முதல் 3 தீவிரவாதிகள் காலை ஊடுருவ முயன்றனர்.
அங்கிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். உடனே தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இரு தரப்பினருக்கும் பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
பாதுகாப்பு படை வீரர்களின் அதிரடி தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்தனர்.
அந்த பகுதியில் வேறு தீவிரவாதிகள் இருக்கிறார்களா என்று தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் நேற்று மாலை நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் நிகழ்ந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியை முறியடித்து 2 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்று பதிலடி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.