கற்பனையில் நினைத்துப் பார்க்காத பதிலடி தருவோம்-மோடி ஆவேசம்
1 min read
response that is beyond imagination – Modi’s fervor
24.4.2025
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அனந்த்நாக்கில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து ஜம்மு காஷ்மீரில் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 42 தீவிரவாத முகாம்கள் செயல்படுவதை இந்திய ராணுவம் அடையாளம் கண்டுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
அங்கு 130 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்திய ராணுவம் எந்நேரமும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பீகாரின் மதுபானியில் நடந்த தேசிய பஞ்சாயத்து ராஜ் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பின் ரூ.13,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி பஹல்காம் தாக்குதலுக்கு மவுன அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின் பேசிய அவர் கூறியதாவது:-
“பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்குக் கற்பனையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பதிலடி கொடுக்கப்படும்.
இன்று, பீகார் மண்ணிலிருந்து, நான் முழு உலகிற்கும் கூறுகிறேன், இந்தியா ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் அடையாளம் கண்டு தண்டிக்கும். பூமியின் கடைசி வரை அவர்களைத் துரத்துவோம். இந்தியாவின் உணர்வு பயங்கரவாதத்தால் ஒருபோதும் உடைக்கப்படாது. பயங்கரவாதம் தண்டிக்கப்படாமல் போகாது.
மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் எங்களுடன் இருக்கிறார்கள். எங்களுடன் நின்ற மக்களுக்கும், நாடுகளின் தலைவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.
நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். இந்த உறுதிப்பாட்டில் முழு தேசமும் உறுதியாக நிற்கிறது”
இவ்வாறு அவர் கூறினார்.