ஆக்கிரமிப்பு காஷ்மீரில் திடீர் வெள்ளம்; இந்தியா நீர் நடவடிக்கையா?
1 min read
Flash floods in occupied Kashmir; Is India taking action?
27/4/2025
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக ஓடும் ஜீலம் நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரம் வசித்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர். இந்தியா முன்னறிவிப்பு இன்றி உரி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டதே இதற்கு காரணம் எனவும், தண்ணீர் பயங்கரவாதத்தில் இந்தியா ஈடுபடுவதாகவும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள், சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலையடுத்து, பயங்கரவாதத்திற்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.
சிந்து நதி நீர் நிறுத்தம், அட்டாரி – வாகா எல்லை மூடல் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாகிஸ்தானும் பதிலுக்கு ஷிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. தங்கள் நாட்டு வான்பரப்பை இந்திய விமானங்கள் பயன்படுத்தக்கூடாது எனவும் பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. அதுபோக எல்லையிலும் அடாவடியாக அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.
பாகிஸ்தானின் இந்த துப்பாக்கி சூடு நடவடிக்கைக்கு இந்தியாவும் தக்க பதிலடியை கொடுத்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தினால் பாகிஸ்தானில் பெரும் பஞ்சம் ஏற்படும் அபாயம் என்று கதறும் பாகிஸ்தானிய அதிகாரிகள், இந்தியாவின் இந்த எதிர்பாராத அடியை கண்டு மிரண்டு போயுள்ளனர். இதற்கிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஓடும் ஜீலம் நதியில் திடீரென தண்ணீர் மட்டம் அதிகரித்துள்ளது.
இதனால், கரையோரம் வசித்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு தப்பி ஓடியுள்ளனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு சென்ற நிலையில், அவர்களின் உடைமைகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜீலம் நதியில் நீர் வரத்து திடீரென உயர்ந்ததற்கு இந்தியாதான் காரணம் எனவும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முன்னறிவிப்பு இன்றி திடீரென தண்ணீரை ஆற்றில் இந்தியா திறந்துவிட்டு இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறது. ஜீலம் நதியில் திடீரென நீர் மட்டம் உயர்ந்ததில், ஹட்டியன் பாலா மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது எனவும் அவர்கள் கூறினர். இது தொடர்பாக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள டுமேல் கிராமத்தை சேர்ந்த முகம்மது ஆசிப் என்பவர் கூறுகையில், “எங்களுக்கு எந்த எச்சரிக்கையும் கொடுக்கவில்லை.
தண்ணீர் திடீரென அதிகரித்தது. இதனால், எங்களின் உடைமைகளை பத்திரப்படுத்த முடியாமல் தவித்தோம்” என்றார். கோஹலா மற்றும் தல்கோட் ஆகிய இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதில் கால்நடைகள் அடித்து செல்லப்பட்டதாகவும், ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தியாதான் இதற்கு காரணம் என்றும் தண்ணீர் பயங்கரவாதத்தில் இந்தியா ஈடுபட்டு இருப்பதாகவும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். எனினும், இந்த குற்றச்சாட்டை நியாயப்படுத்தும் வகையில் எந்த ஆதாரத்தையும் அவர்கள் முன்வைக்கவில்லை.
ஜீலம் நதியில் அதிக நீர் திறந்துவிட்டதாக வெளியாகும் தகவலை ஏற்கவோ, நிராகரிக்கவோ இந்திய அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அதேநேரத்தில் தண்ணீர் திறந்துவிடுவது என்பது வழக்கமான நடைமுறைதான் எனவும், ஜம்மு காஷ்மீரில் அதிக மழை பெய்ததால் தண்ணீர் அதிக அளவில் திறக்கப்பட்டதாகவும் சில ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பீர் பஞ்சல் தொடரில் ஜீலம் ஆறு உருவாகி, ஸ்ரீநகர் மற்றும் வுலர் ஏரி வழியாக பாய்ந்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பாகிஸ்தானை அடைகிறது.
காரணம் என்ன?
வழக்கமாக தண்ணீர் திறந்து விடுவது பற்றி இந்தியா பாகிஸ்தானுக்கு முன்அறிவிப்பு செய்யும். தற்போது நதிநீர் ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டதால் அது தொடர்பாக எந்த தகவல் தொடர்பும் இல்லை. அதனால் இந்தியா தண்ணீர் திறந்துவிடும் தகவல் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.