July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

காஷ்மீரில் 48 சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டது

1 min read

48 tourist spots closed in Kashmir

29.4.2025
மத்திய அரசு எடுத்த கடும் நடவடிக்கையால் காஷ்மீரில் சமீபகாலமாக பயங்கரவாத செயல்கள் ஒடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த 22-ந் தேதி யாரும் எதிர்பாராத நிலையில் காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர்.

மிருகத்தனமான இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இத்தகைய கொடுஞ்செயலில் ஈடுபட்டது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான டி.ஆர்.எப். என்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கிறது என்று இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.

அப்பாவி மக்களை கொன்ற பயங்கரவாதிகளுக்கு, கற்பனை செய்யமுடியாத அளவுக்கு தண்டனை பெற்றுத்தருவோம் என்று பிரதமர் மோடி ஆவேசத்துடன் கூறினார். இதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான ராஜிய ரீதியிலான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.

பாகிஸ்தானுடன் செய்யப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததுடன், இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டது. மேலும் இந்தியாவின் நிலை பற்றி உலக நாடுகளுக்கு விளக்குவதற்காக பல்வேறு நாட்டு தூதர்களின் கூட்டத்தையும் வெளியுறவுத்துறை நடத்தியது.

இந்தியா எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையால் கலக்கம் அடைந்த பாகிஸ்தான், தன் பங்குக்கு சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்து, பாகிஸ்தான் வான்பரப்பையும் மூடுவதாக அறிவித்தது.

இதனிடையே எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூட்டை நடத்த தொடங்கியது. இந்திய நிலைகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய பாகிஸ்தான் ராணுவத்துக்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையே எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை இந்திய உளவுப்படை கண்காணித்தபடி உள்ளது. பயங்கரவாதிகள் காஷ்மீரில் இருக்கும் தங்களது சிலிப்பர் செல் ஆதரவாளர்களுடன் பேசி வருவதையும் உளவுத்துறையினர் இடைமறித்து கேட்டு தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.

அந்த வகையில் கடந்த 2 நாட்களில் பயங்கரவாதிகளின் பேச்சை இடைமறித்து கேட்டபோது அவர்கள் மீண்டும் காஷ்மீர் சுற்றுலா தலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அதிக சுற்றுலா பயணிகள் வரும் பொழுதுபோக்கு மையங்களில் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தயாராகி வருவதாகவும் உளவுத் துறைக்கு தெரிய வந்தது.

இதுபற்றி மத்திய உளவுத் துறை சார்பில் எச்சரிக்கை தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 87 சுற்றுலா மையங்கள் இருக்கின்றன.

அவற்றில் 48 சுற்றுலா பகுதிகள் பயங்கரவாதிகள் எளிதில் வந்து செல்லும் பகுதிகளாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 48 சுற்றுலா மையங்களையும் உடனடியாக மூட உத்தரவிடப்பட்டது.

அதன்படி 48 சுற்றுலா மையங்களும் மூடப்பட்டன. மற்ற சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.