June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்திய வான்வெளி மூடல்- ஜாமர் கருவி மூலம் கண்காணிப்பு

1 min read

Indian airspace closure – monitoring with jammer equipment

1.5.2025
காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22-ந்தேதி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீவிரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதல் சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ள நிலையில், தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

பாகிஸ்தான் தூண்டுதலின் பேரிலேயே தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அந்த நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை தடுத்து நிறுத்தி அது தொடர்பான சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்து வெளியிட்ட மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக மேலும் பல நடவடிக்கைகளையும் எடுத்தது.

நாடு முழுவதிலும் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் தங்கி இருந்த பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தியா-பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தினமும் கைகுலுக்கி கொள்ளும் நிகழ்வுக்கு தடை விதித்து வாகா எல்லையையும் மத்திய அரசு மூடியது.

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கையை இந்தியா அதிரடியாக மேற்கொண்டுள்ளது. இந்திய வான்வெளி பகுதியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு தடை விதித்து நேற்று நள்ளிரவில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நேற்று முதல் வருகிற 23-ந் தேதி வரையில் 3 வாரங்களுக்கு பாகிஸ்தான் விமானங்கள் எதுவும் இந்திய வான்வெளி எல்லையை பயன்படுத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த வணிக விமானங்கள், ராணுவ விமானங்கள், பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள் என அந்த நாட்டை சேர்ந்த அனைத்து வகையான விமானங்களுக்கும் முழுமையாக தடை விதித்து வான்வெளி எல்லையை இந்தியா மூடி இருப்பது எல்லையில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்த நடவடிக்கையால் அந்த நாட்டில் இருந்து சிங்கப்பூர், மலேசியா போன்ற கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் சீனா, இலங்கை ஆகிய நாடுகளின் வான்வெளியை பயன்படுத்தி நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இதன் மூலம் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்கள் உள்பட அந்த நாட்டில் இருந்து புறப்பட்டு இந்திய வான்வெளியை பயன்படுத்தி வந்த விமானங்களுக்கு எரிபொருள் செலவு அதிகமாகி கட்டணம் உயர்வதற்கான சூழலும் ஏற்பட்டு உள்ளது.

இது பாகிஸ்தானுக்கு பொருளாதார ரீதியாக கடும் சிக்கலை ஏற்படுத்தும் என்றே கணிக்கப்பட்டு உள்ளது. பஹல்காம் தாக்குதல் சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்கள் தடையை மீறி பறந்தால் அதனை கண்டுபிடிக்கும் வகையிலான துல்லிய கண்காணிப்புகளை கொண்டு உள்ள ஜாமர் கருவிகளையும் நாட்டின் மேற்கு எல்லையில் இந்தியா பயன்படுத்த தொடங்கியுள்ளது.

சம்யுக்தா, ஹிம்சக்தி, ஸ்பெக்ட்ரா, காளி 5000 ஆகிய ஜாமர் கருவிகள் மூலமாக கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இவை அமெரிக்காவின் ஜி.பி.எஸ்., ரஷ்யாவின் குளோ ரைய்டு மற்றும் சீனாவின் பீடோ உள்ளிட்ட பல்வேறு செயற்கைகோள்கள் மூலமாக கட்டளையிடப்படும் விமான சிக்னல்களையும் இந்த ஜாமர்கள் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவையாகும்.

பாகிஸ்தான் பயன்படுத்தி வரும் ஜி.என்.எஸ்.எஸ். செயற்கைக் கோள் சிக்னலையும் இந்தியா பயன்படுத்தி வரும் ஜாமர்கள் முழுமையாக கண்டுபிடித்து விமானங்கள் வந்தால் அதனை துல்லியமாக தெரிவிக்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லையில் பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வரும் நிலையில் வான்வெளி எல்லை மூடப்பட்டிருப்பது இருநாடுகளுக்கும் இடையேயான போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

நேற்று முதல் வருகிற 23-ந்தேதி வரை இந்திய வான்வெளியை மூடியுள்ள மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக இந்த காலக்கட்டத்தில் (அடுத்த 3 வாரங்களில்) அதிரடி தாக்குதலை மேற்கொள்ளலாம் என்கிற தகவல்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.