ராணுவ வீரர்களை போற்றும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் பனாரஸ் சேலை
1 min read
Operation Sindoor Banaras Saree in tribute to soldiers
24.5.2025
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் கடந்த 7-ந்தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த விஜய் பவசிங் என்ற நெசவாளர், ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு பனாரஸ் சேலையை வடிவமைத்துள்ளார்.
அதில், இந்திய ராணுவத்தை கவுரவிக்கும் வகையில் பிரமோஸ், ரபேல், எஸ்.400, ஐ.என்.எஸ். விக்ராந்த் உள்ளிட்ட இந்திய ராணுவத்தின் முக்கிய ஆயுதங்கள் மற்றும் வீரர்களின் படங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தது.
சுமார் 6.5 மீட்டர் நீளம் கொண்ட அந்த புடவையின் ஒரு பகுதியில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என தையல் செய்யப்பட்டிருந்தது. புடவையின் மையப்பகுதியில் ரபேல், பிரமோஸ், எஸ்.400, இந்திய வீரர்கள் படையின் காட்சிகள் மிக நுட்பமான கலை வடிவத்தில் இடம் பெற்றிருந்தன.
இந்த புடவையை கேப்டன் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோருக்கு நேரில் வழங்க உள்ளதாக வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த பனாராசி புடவை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பயனர்களிடம் பாராட்டை பெற்று வருகிறது.
இதற்கு முன்னதாக விஜய் பவசிங் அயோத்தியாவில் ஸ்ரீ ராமலாலா விழாவுக்காக ஒரு சிறப்பு பனாரசி புடவையும் வடிவமைத்து பாராட்டு பெற்றுள்ளார். இவர் தயாரித்த சிறப்பு தலை பட்டை ஒன்றை பிரதமருக்கு நேரில் வழங்கி உள்ளார்.