பனையடிப்பட்டி: பெண் கொலைக்கான பின்னணி விவரம்
1 min read
Panaiyadipatti: Background details of the female murder
2.5.2025
பாவூர் சத்திரம் அருகே பனையடிப்பட்டியில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கொலை ஏன் நடந்தது என்ற விவரம் இப்போது தெரிய வந்துள்ளது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள பனையடிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மூக்கையா மகன் பரமசிவன் (வயது 43). இவர் பாவூர்சத்திரம் ரோட்டில் சலூன் கடை வைத்துள்ளார். இவரது மனைவி உமா ( 41). இருவருக்கும் திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். உமா பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பரமசிவன் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அப்போது அவரை அதே பகுதியைச் சேர்ந்த மணிக்குமார் என்பவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார்.
அச்சமயம் பரமசிவன் வீட்டிற்கு மணிக்குமார் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது மணிக்குமாருக்கும் உமாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளர். அவர்கள் இருவருக்கு தவறான தொடர்பு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் பேசினார்கள்.
இதுபற்றிய விபரம் பரமசிவனுக்கு தெரியவரவே அவர் தனது மனைவி உமாவை கண்டித்துள்ளார். மணிக்குமாருடன் பேசுவதை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். கணவரின் அறிவுரையை ஏற்ற உமா கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே மணிக்குமாருடன் பேச்சை நிறுத்தினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மணிக்குமார் செல்போன் மூலமும், நேரிலும் உமாவை மிரட்டி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு மணிக்குமார் செல்போன் மூலம் உமாவிடம் தொடர்பு கொண்டு அவதூறாக பேசியுள்ளார். மேலும் தன்னுடன் உறவு வைத்துக் கொள்ளாவிட்டால் தான் எந்த எல்லைக்கும் செல்வேன் என்று மிரட்டியுள்ளார். அதற்கு உமா போலீசில் புகார் கொடுப்பேன் என தெரிவித்துள்ளார். அதனை கேட்ட மணிக்குமார் நீ உயிருடன் இருந்தால்தானே புகார் தெரிவிப்பாய் என கூறி போன் தொடர்பை துண்டித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் பரமசிவன் டீக் கடைக்குச் செல்ல வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். வீட்டின் கீழ் பகுதியில் உமா தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மணிக்குமார் கையில் கத்தியுடன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கே தூங்கிக் கொண்டிருந்த உமாவை கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து விட்டு ரத்த கறையோடு வெளியே வந்துள்ளார்.
அப்போது பரமசிவன் டீ குடித்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். பரமசிவனை பார்த்ததும் மணிக்குமார் தப்பி ஓடிவிட்டார். பரமசிவன் வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு உமா கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் பரமசிவன் புகார் செய்தார். ஆய்வாளர் ஹரிஹரன் வழக்கு பதிவு செய்து. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆலங்குளம் டி.எஸ்.பி.,சகாய ஜோஸ் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். உமாவை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மணிக்குமாரை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.
உமா கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தென்காசி, பாவூர்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உமாவை கொலை செய்த மணிக்குமார் கேரள மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம் என்பதால் பாவூர்சத்திரம் போலீசார் கேரள மாநிலத்திற்கு விரைந்துள்ளார்கள்.