ரூ.300 கோடி முதலீட்டில் ரோபோட்டிக் பாகங்கள் உற்பத்தி ஆலை- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
1 min read
Chief Minister inaugurates robotic parts manufacturing plant with an investment of Rs. 300 crore
4.6.2025
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அஜைல் ரோபோட்ஸ் எஸ்.இ. நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, புதிய தலைமுறை தானியங்கு தீர்வுகளை வழங்கும் நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனம், தற்போது, அனைத்துத் துறைகளுக்கும் பயன்படும் வகையில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோட்டிக் இயந்திர பாகங்கள் உற்பத்தித் தொழிற்சாலையை, காஞ்சீபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் நிறுவியுள்ளது.
இத்திட்டத்தில், 300 கோடி ரூபாய் முதலீட்டில் 300 உள்ளூர் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஒ.எல். இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இத்தாலி நாட்டைச் சேர்ந்த எஸ்.ஒ.எல். எஸ்.பி.எ. மற்றும் இந்தியாவின் சிக்ஜில்சால் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் ஆகும். ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள இந்நிறுவனம், தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது.
2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, 100 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது 200 கோடி ரூபாய் முதலீடு என்ற வகையில், இந்நிறுவனம், தமிழ்நாடு அரசுடன் காற்று பிரித்தெடுக்கும் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது.
இந்நிறுவனத்தின் காற்று பிரித்தெடுப்பு ஆலை அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 19.7.2023 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது பணி நிறை வடைந்து, 175 கோடி ரூபாய் முதலீட்டில், காற்று பிரித்தெடுக்கும் ஆலை நிறுவப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது உறுதியளித்த முதலீடுகள் இதில் அடங்கும். 20 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்விரு ஆலைகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மேலும் பல்வேறு கல்லுரிகளை சேர்ந்த 6 மாணவர்களுக்கு உள்ளகப் பயிற்சி அளிப்பதற்கான கடிதங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.