திருப்பதி இலவச தரிசனத்தில் வெள்ளி முதல் புதிய மாற்றம்
1 min read
New change in free darshan of Tirupati from Friday
4.6.2025
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் நடந்து செல்கின்றனர்.
நடந்து செல்லும் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது. ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் வரும் பக்தர்களுக்கு தினமும் 5 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன.
ஒரு சில ஆட்டோ மற்றும் வாடகை கார், டிரைவர்கள் இலவச தரிசன டோக்கன் வாங்கி தருவதாக பக்தர்களிடம் பண மோசடி செய்து வருகின்றனர்.
இந்த மோசடியை தடுக்க திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
அதன்படி ஸ்ரீ வாரி மெட்டு நடைப்பாதையில் உள்ள சீனிவாச மங்காபுரம், கல்யாண வெங்கடேஸ்வர சாமி கோவிலுக்கு அருகில் டிக்கெட் கவுண்டரை மாற்ற முடிவு செய்தனர்.
இதற்காக மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்டுள்ளனர். இதுவரை அனுமதி வரவில்லை. இதனால் ஸ்ரீவாரி மெட்டு பாதையில் தரிசன டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
இலவச தரிசன டோக்கன் கவுண்டரை அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் வளாகத்திற்கு மாற்றி உள்ளனர்.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை முதல் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை பக்தர்கள் அலிபிரியில் இலவச தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு சனிக்கிழமை தரிசனம் செய்யலாம்.
கவுண்டரில் வழங்கப்படும் தரிசன டிக்கெட்டுகளை ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில் உள்ள 1200-வது படியில் கட்டாயம் ஸ்கேன் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை பக்தர்களுக்கு அலிபிரியில் இலவச டிக்கெட் கவுண்டர் அமைக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் அவதி அடைவார்கள்.
எனவே அலிபிரி நடைபாதையிலேயே டிக்கெட் கவுண்டர் அமைக்க தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.