பணமோசடி வழக்கில் கைதான அ.தி.மு.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
1 min read
AIADMK executive arrested in money laundering case expelled from party
6/6/2025
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைதான அ.தி.மு.க. ஐ.டி. விங் நிர்வாகி பிரசாத்தை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுளதாவது;-
“கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், பிரசாத் (கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர், தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்டம் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உறுப்பினர்கள் யாகும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
==
மாநிலங்களவை தேர்தல் – அதிமுகவினர் வேட்புமனு தாக்கல்
சென்னை,
தமிழக மாநிலங்களவை எம்.பி.க்களான ம.தி.மு.க.வைச் சேர்ந்த வைகோ, தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், முகமது அப்துல்லா, பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க. சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. எனவே அதற்கான தேர்தல், வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் தனபால் ஆகியோர், தங்களது வேட்பு மனுக்களை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அலுவலகத்தில் தாக்கல் செய்தனர். அதிமுகவினர் வேட்புமனுக்களை தாக்கல் செய்யும்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் உடன் இருந்தார். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கேபி.முனுசாமி ஆகியோரும் உடன் இருந்தனர்.
அதேபோல, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களான வில்சன், கவிஞர் சல்மா, சிவலிங்கம் ஆகியோரும் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசனும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்