சுரண்டையில் மாணவிக்கு பாலியல் தொல்லை: துப்பாக்கியை காட்டி மிரட்டியவர் கைது
1 min read
Student sexually harassed in Tenkasi: Man arrested for threatening her with a gun
7.6.2025
தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியைச் சேர்ந்த நீலகண்டன் (வயது 58), தனியார் டிராவல்ஸ் மேலாளராக வேலை பார்த்து வந்தார். தென்காசி அருகே உள்ள கிராமத்தில் இவரது நண்பர் வீடு உள்ளது. நீலகண்டன் அடிக்கடி அந்த வீட்டிற்கு சென்றுவந்தார். அப்போது நண்பரின் மகளான 12-ம் வகுப்பு மாணவியுடன் பேசி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 9.2.2023 அன்று அந்த மாணவியின் தம்பி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த நீலகண்டன், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், துப்பாக்கியை காட்டி இந்த விஷயத்தை வெளியே சொன்னால் சுட்டுக் கொன்றுவிடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து மாணவி, ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகாரை பெற்றுக் கொண்டு வழக்குப் பதிய கால தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, நீலகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.
அதனை தொடர்ந்து மாணவியை பாலியல் தொந்தரவு செய்த நீலகண்டன் மீது காவல் நிலையத்தில் கடந்த மே 17ம்தேதி வழக்குப்பதிவு செய்யபட்டது. இதை அறிந்த அவர் தலைமறைவானார். போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். நீலகண்டன் மும்பையில் இருப்பதாக தனிப்படைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, நீலகண்டனை கைது செய்து அழைத்து வந்தனர். பின்னர் அவர் தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.