ராகுல் காந்தியுடன் கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா சந்திப்பு
1 min read
Karnataka Chief Minister Siddaramaiah meets Rahul Gandhi
10.6.2025
ஐ.பி.எல். சாம்பியன் கோப்பையை வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கடந்த 4-ந்தேதி பாராட்டு விழா நடந்தது.இதில் கலந்துகொள்ள லட்சக்கணக்கானோர் திரண்டு வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். சிலர் கீழே விழுந்தவர்கள் மீது ஏறிச் சென்றனர். இதனால் 11 பேர் உயிரிழந்தனர்.இ்ந்த சம்பவத்துக்கு அரசின் பாதுகாப்பு குறைபாடே காரணம் என்பதும், அவசரம், அவசரமாக விழாவை ஏற்பாடு செய்தது தான் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் போலீஸ் கமிஷனர் உள்பட 5 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆர்.சி.பி. அணி மார்க்கெட்டிங் மேலாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த விவகாரம் தொடர்பாக சி.ஐ.டி. போலீசார், மாஜிஸ்திரேட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
பெங்களூரு நெரிசல் சம்பவம் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ள நிலையில், கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து விளக்கம் அளிக்க சித்தராமையா இன்று காலை டெல்லி சென்றார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோரை சித்தராமையா சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது, பெங்களூர் நெரிசல் சம்பவம் கட்சி மேலிடத்திற்கு சித்தராமையா விளக்கம் அளித்து இருக்கலாம் என்று தெரிகிறது.