விமான விபத்தில் இறந்த முன்னாள் முதல்-மந்திரியின் குடும்பத்தினரை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்
1 min read
PM Modi meets family of former CM who died in plane crash, offers condolences
13.6.2025
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் ஏர் இந்தியா விமானம் இங்கிலாந்தின் லண்டனுக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் 230 பயணிகள் 10 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் பயணித்தனர்.
விமானம் மதியம் 1.39 மணியளவில் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் விமான நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவ மாணவர் விடுதி மீது விமானம் விழுந்து வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். மருத்துவ மாணவர் விடுதியில் 7 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணம் செய்த ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்தார்.
இந்த விமானத்தில் பா.ஜ.க. மூத்த தலைவரும், குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் உயிரிழந்தார். அவர் லண்டனில் உள்ள தனது மனைவியை அழைத்து வர விமானத்தில் சென்றுள்ளார்.ஆனால், விமான விபத்தில் விஜய் ரூபானி உயிரிழந்தார்.
இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்த முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியின் குடும்பத்தினரை பிரதமர் மோடி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.