பொன்முடி பேச்சு- உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
1 min read
Ponmudi speech – High Court orders action!
13.6.2025
சைவம், வைணவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக வழக்குப் பதிவு செய்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இன்று ஜூன் 13-ந் தேதி காவல்துறை தலைவர் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. Ponmudi’s Controversial Speech Case
சைவம் மற்றும் வைணவ மதங்கள் தொடர்பாக அமைச்சராக இருந்த பொன்முடி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனால் பொன்முடியின் திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது; பின்னர் அமைச்சரவையில் இருந்தும் நீக்கப்பட்டார் பொன்முடி.
இதனிடையே பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி பி.ஜெகந்நாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி கேஆர் ஶ்ரீராம், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த விசாரணையின் போது தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு ஜூன் 19-ந் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொன்முடியின் வெறுப்பு பேச்சுக்காக அவர் மீது வழக்கு பதிவு செய்து ஏப்ரல் 23-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்; பொன்முடி மீது உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
இதனடிப்படையில் சென்னை உயர்நீதின்றம் தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, தமிழக காவல்துறை தலைவர் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு வழக்கின் ஆவணங்களை வழங்க வேண்டும் என்றும் இவ்வழக்கில் இருவரும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார் நீதிபதி வேல்முருகன். இவ்வழக்கின் விசாரணை வரும் 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.