June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

மா.சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கு : சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

1 min read

Case against M. Subramanian: Time till July 24 – Special Court orders!

17.6.2025
திமுக அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக மா.சுப்பிரமணியன் பதவி வகித்து வருகிறார். 2006 – 2011 வரை சென்னை மாநகராட்சி மேயராகவும், அதற்கு முன்பு சென்னை மாநகராட்சி கவுன்சிலராகவும் மா.சுப்பிரமணியன் இருந்துள்ளார். இதனிடையே சென்னை கிண்டி தொழிலாளர் காலணியில் எம்.கே.கண்ணன் என்ற நபருக்கு சிட்கோவுக்கு சொந்தமான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி போலியான ஆவணங்கள் மூலமாக தனது மனைவி காஞ்சனா பெயரில் மா.சுப்பிரமணியன் மாற்றிவிட்டதாக சைதாபேட்டையைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு எதிராக மோசடி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மா.சுப்பிரமணியன் வழக்கு தாக்கல் செய்தார். அதில், 1998ஆம் ஆண்டு வாங்கப்பட்டது குறித்து சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இடம் வாங்கியது தொடர்பாக அரசுக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை என்றும், அதிகார துஷ்பிரயோகம் நடந்தது குறித்த ஆதாரங்கள் இல்லை என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்த கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம், மா.சுப்பிரமணியன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதற்கு எதிராக மா.சுப்பிரமணியன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அங்கு இது அரசியல் ரீதியாக தொடரப்பட்ட வழக்கு என்றும், விவகாரம் நடந்தபோது தான் மேயராக இருந்த நிலையில், அரசிடம் இருந்துதான் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். ஆனால், சபாநாயகர் ஒப்புதல் அளித்தது விதி மீறல் உள்ளிட்ட வாதங்களை முன்வைத்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதனிடையே மா.சுப்பிரமணியன் வழக்கை நீதிபதி பிரபாகரன் விசாரித்து வந்த நிலையில், கடந்த மாதம் வெங்கட வரதன் அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி வெங்கட வரதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மா.சுப்பிரமணியன் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு நிலுவையில் இருப்பதால், இவ்வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைக் கேட்டுக்கொண்ட நீதிபதி வெங்கட வரதன், இவ்வழக்கில் இதற்கு மேற்கொண்டு எவ்வித கால அவகாசமும் வழங்க முடியாது என்று தெரிவித்தார். வழக்கில் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டுப் பதிவையும் ஜூலை 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினத்திற்குள் உச்ச நீதிமன்றத்தில் நிவாரணம் பெற வேண்டும் என்றும், இல்லையெனில் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி மீது ஜூலை 24 குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

இதனால் இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு கொண்டு வரும் பணிகளை மா.சுப்பிரமணியன் தரப்பு மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.