கேரளாவில் வீடுகளில் புகுந்த கடல் தண்ணீரால் மக்கள் தவிப்பு
1 min read
People in Kerala are suffering due to sea water entering their homes
18.6.2025
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக எர்ணாகுளம், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பாரதப்புழா, நீலேஸ்வரம், மணிமாலா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடல் சீற்றமும் மறுபுறம் கடலோர கிராம மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்தநிலையில், எர்ணாகுளம் மாவட்டம் செல்லாளம் பகுதியில் கனமழை காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டு, 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. குறிப்பாக, கண்ணமாலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மார்பளவுக்கு தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதிமக்கள் தண்ணீரில் தத்தளித்தனர்.
கடல்நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் பலரும் தங்களது உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடல் சீற்றத்தாலும், கடல் அரிப்பாலும் பெரிதும் பாதிக்கப்படும் இந்த பகுதியில், தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்பொழுது வைரலாக பரவி வருகிறது.