அடைக்கலப்பட்டணம் எஸ்.எம்.ஏ. பள்ளி உரிமையாளர் வீட்டில் ரூ.1 கோடி நகைகள் கொள்ளை
1 min read
Rs. 1 crore worth of jewellery stolen from Aadikalapattanam SMA school owner’s house
29.6.2025
தென்தாசி மாவட்டம் ஆலங்குளம் அருகே எஸ்.எம்.ஏ. கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் வீட்டில் கோடிக்கணக்கான மதிப்பிலான தங்கம், வைரம், பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டினம் அருகே உள்ள நவநீதகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர்(வயது 58). இவருக்கு மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இவர் நெல்லை-தென்காசி நான்குவழிச்சாலையில் அடைக்கலப்பட்டினம் ஊருக்கு கீழ்புறத்தில் மெட்ரிக் பள்ளி, சிபிஎஸ்இ பள்ளி மற்றும்
பி.எட் கல்லூரி நடத்தி வருகிறார். அவரது கல்வி நிறுவனத்தை அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கவனித்து வருகின்றனர்.
இவர்களது கல்வி நிறுவனத்தின் வளாகத்திற்குள்ளேயே ராஜசேகர் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். நேற்று வெளியூரில் நடைபெற்ற தனது உறவினர் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக ராஜசேகர் தனது குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்றுவிட்டார்.
இதனால் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், கல்வி நிறுவன வளாகத்தில் இருந்த காவலாளிகள் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை ராஜசேகரின் மனைவி மகேஸ்வரி மட்டும் வந்தார். அப்போது, வீடு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது, கோடிக்கணக்கில் பணம், தங்கம் மற்றும் வைர நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதுபற்றி ராஜசேகரின் மனைவி மகேஸ்வரி ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
தகவலறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த், தலைமையில் ஆலங்குளம் போலீஸார் சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தினர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு வீட்டு அருகில் உள்ள மரம் வழியாக ஏறிக் குதித்து, பணம் மற்றும் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.
மேலும் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களும் செயல்படவில்லையாம். கைரேகை நிபுணர்கள் பீரோ, கதவுகள் உள்ளிட்டவற்றில் பதிவான ரேகைகளை ஆய்வு செய்தனர். மேலும் ஆலங்குளம் போலீஸார் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் நடந்த வீட்டில் சி.சி.டி.வி. காமிராக்கள் எதுவும் இல்லை. அதேநேரம் கல்வி நிறுவன நுழைவு வாயில் பகுதியில் காமிராக்கள் இருக்கிறது. ஆனால் அந்த காமிராக்களில் ஏதேனும் மர்ம நபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகவில்லை.
இதனால் நெல்லை-தென்காசி 4 வழிச்சாலையில் உள்ள வணிக வளாகங்களில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.