June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

ராகுல்காந்தியை பேச அனுமதிக்ககோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டம்

1 min read

Opposition protests in Parliament, demanding that Rahul Gandhi be allowed to speak
22.7.2025
ராகுல் காந்தியை அவையில் பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நேற்று தொடங்கியது. எதிர்க்கட்சியினரின் பல்வேறு அமளிக்கு இடையே இரு அவைகளும் இன்று பலமுறை ஒத்தி வைக்கப்பட்டன. இந்த சூழலில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என அறிவித்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் அவையை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இரண்டாவது நாளான இன்று இரு அவைகளும் கூடியபோது, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

இதன்படி, மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தமிழக எம்.பி.க்களான ஆ. ராசா, கனிமொழி, டி.ஆர். பாலு, ஜோதிமணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் மகர் துவார் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு முன் அவை கூடியபோது, இரு அவைகளிலும் பீகாரில் சிறப்பு தீவிர மதிப்பாய்வு (எஸ்.ஐ.ஆர்.) விவகாரம் பற்றி எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பின.

இந்த எஸ்.ஐ.ஆர். விவகாரத்தின்படி, பீகாரில் வாக்காளர் பட்டியலில் மறுஆய்வு மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஒரு வெளிப்படையான, சுதந்திர மற்றும் சிறந்த முறையிலான தேர்தல் நடைமுறையை உறுதி செய்வதில் இந்த பட்டியல் முக்கியத்துவம் பெறுகிறது.

இதன்படி, குடிமக்கள் அல்லாதோர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள். 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்திய குடிமக்களும், பிரிவு 19-ன்படி பட்டியலில் சேர்க்க அனுமதிக்கப்படுவர். இந்த எஸ்.ஐ.ஆர். விவகாரம் பற்றி அவையில் பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியும், ராகுல் காந்தியை அவையில் பேச அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *