இஸ்ரேல் தாக்குதல் கத்தார் அமீருக்கு பிரதமர் மோடி போனில் ஆறுதல்
1 min read
PM Modi calls Qatari Emir to offer condolences over Israeli attack
11.9.2025
காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ஹமாஸ் அரசியல் தலைவர்கள் கத்தார் தலைநகர் தோஹாவில் கூடியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று இஸ்ரேல் போர் விமானங்கள் திடீரென, கத்தாரில் ஹமாஸ் அலுவலகம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தின.
இதில், ஹமாஸ் தலைவர்கள் உயிர் தப்பினர். ஆனால், 5 ஹமாஸ் உறுப்பினர்களும், ஒரு கத்தார் பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர்.
அமைதி திரும்ப மத்தியஸ்தம் செய்த நாடு மீதே இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கண்டித்தன.
இந்நிலையில் பிரதமர் மோடி கத்தார் அமீருடன் தொலைபேசியில் பேசி தனது ஆறுதலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “தோஹாவில் நடந்த தாக்குதல்கள் குறித்து கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானியிடம் பேசி, ஆழ்ந்த கவலை தெரிவித்தேன்.
சகோதரத்துவ நாடான கத்தாரின் இறையாண்மையை மீறுவதை இந்தியா கண்டிக்கிறது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், மோதல் அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்கும் நாங்கள் ஆதரவளிக்கிறோம்.
பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவாகவும், அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் இந்தியா உறுதியாக நிற்கிறது”
இவ்வாறு தெரிவித்தார்.