டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு விஜய் ஆஜர்
1 min read
Vijay appears for questioning at the CBI office in Delhi
12.1.1026
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அங்கு வைத்து புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா, மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கடந்த நவம்பர் மாதம் விசாரணை நடைபெற்றது.இதைத்தொடர்ந்து அவர்களுக்கு சம்மன் அனுப்பி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திலும் கடந்த மாதம் 3 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஜய்யின் பிரசார வாகனத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே பார்வையிட்டு சென்ற நிலையில், அந்த வாகனத்தை கரூருக்கு வரவழைத்து பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்கள். பிரசார வாகன டிரைவரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டன.விசாரணை முடிந்தவுடன் பிரசார வாகனத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் திரும்ப ஒப்படைத்தனர்.
கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் விஜய்யின் பெயர் இல்லை. எனினும் அவரிடமும் விசாரணை நடத்துவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர்.இந்தநிலையில் விசாரணையின் தொடர்ச்சியாக த.வெ.க. தலைவர் விஜயையும் நேரில் அழைத்து விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்து அவருக்கு சம்மன் அனுப்பியது. இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் காலை 11 மணிக்கு அவர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த சம்மனை ஏற்று சிபிஐ முன் ஆஜர் ஆவதற்காக விஜய் இன்று காலை 6 மணியளவில் தனது பனையூர் வீட்டில் இருந்து டெல்லி புறப்பட்டார். தனி விமானத்தில் விஜய் டெல்லி சென்றார்.
காலை 10.30 மணியளவில் விஜய், டெல்லி சென்றடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் சிபிஐ அலுவலகத்திற்கு சென்றார். விஜய் வருகையை ஒட்டி சிபிஐ அலுவலகம் அமைந்துள்ள ஒரு பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. ஒய் பிரிவு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட விஜய், சிபிஐ முன்பு விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
விஜய்யிடம் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 80-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் இன்று நடந்த விசாரணை நிறைவுபெற்றுள்ளது.
சிபிஐ அதிகாரிகள் 4 பேர் தமிழக வெற்றிக் கழக தலைவ் விஜயிடம் மட்டும் தனியாக விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கரூர் துயரம் தொடர்பாக விஜய்யிடம் சிபிஐ முன்வைத்த முக்கிய கேள்விகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;
- “நிகழ்ச்சி நடைபெறும் நாளில் இறுதி முடிவு யாருடையது?
- கூட்டம் அதிகமாகிறது என்று தகவல் வந்தபோது நிகழ்ச்சியை தொடரச் சொன்னது யார்?
- மேடையில் இருந்தபோது பாதுகாப்பு அதிகாரிகளுடன் நேரடி தொடர்பு இருந்ததா?
- கூட்ட நெரிசல் ஏற்பட்ட அந்த நிமிடங்களில் நீங்கள் எங்கே இருந்தீர்கள்?
- காயமடைந்தவர்கள் பற்றி உடனடி தகவல் கிடைத்ததா?
- மேடையிலிருந்து பின்வாங்குங்கள், அமைதியாக இருங்கள் போன்ற அறிவுறுத்தல் கொடுக்க முயற்சி செய்தீர்களா?
- கரூர் மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியவற்றிடமிருந்து முன்அனுமதி பெறப்பட்டதா?
- கூட்ட அளவு, நேரம், பாதுகாப்பு போன்ற காவல்துறையின் நிபந்தனைகள் பின்பற்றப்பட்டதா?
- பாதுகாப்பு பணியாளர்கள், தடுப்புகள், நுழைவு–வெளியேற்ற வழிகள் இருந்ததா?
- கூட்டம் திடீரென அதிகரித்ததை யார் கவனித்தனர், என்ன நடவடிக்கை எடுத்தனர்? விஜய்யுடன் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோரும் டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.