தனியார் நிறுவனங்கள் வடமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்க போலீஸ் உத்தரவு
1 min read
Action will be taken if details of workers from northern states are not collected.
16.6.2026
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் பலர் குடும்பத்தோடும், தனியாகவும் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.
இதனிடையே, அப்பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை இருந்தது. வீட்டில் இருந்த அந்த குழந்தை நேற்று திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை தேடியுள்ளனர். அதேவேளை, குழந்தை வீட்டிற்கு அருகே உள்ள முட்புதரில் சடலமாக கிடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த பீகார் மாநிலத்தை சேர்ந்த பிபின் மஞ்சியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பிபின் மஞ்சி அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார்
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்ததை அடுத்து, தமிழகத்தில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் வேலை செய்துவரும் வடமாநில தொழிலாளர்களின் விவரங்களை அந்தந்த நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் சேகரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து நிலவி வருகிறது.
இந்நிலையில், கும்மிடிப்பூண்டியில் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பூதாகரமான நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்க மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், வடமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்காவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.