திமுகவுக்கு வரச்சொல்லி ரூ.50 கோடி பேரம்; ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ குற்றச்சாட்டு
1 min read
Allegation by Srivaikuntam TVK MLA: Rs 50 crore offer made to join DMK.
6.7.2026
தமிழக அரசியல் சூழ்நிலை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாக இருக்கிறது.
த.வெ.க. எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்க ரூ.180 கோடியில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
எனவே த.வெ.க. ஆட்சியை கலைக்க குதிரை பேரம் நடத்துவதாக தி.மு.க. மீது த.வெ.க. வெளிப்படையாக குற்றம் சாட்டி வருகிறது.
ஆனால் தி.மு.க. எம்.எல். ஏ.க்களை விலைக்கு வாங்க த.வெ.க. அரசு முயற்சி செய்து வருவதாக தி.மு.க.வும் குற்றம் சுமத்தி இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க இதுவரை அ.தி.மு.க.வில் இருந்து 6 எம்.எல். ஏ.க்கள் ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்துள்ளனர். இது அப்பட்டமான குதிரை பேரம் என்று அ.தி.மு.க. குற்றம் சுமத்தி வருகிறது.
இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் குதிரை பேர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அமைச்சரவை கூட்டத்தில் 2 தனிநபர்கள் கலந்து கொண்டது குறித்து கவர்னர் விசாரிக்க வேண்டும் என்று நேற்று முன் தினம் ஒரே நாளில் எதிர்க்கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா சார்பில் கவர்னர் ஆர்.வி.அர்லேகரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் உதவியாளர்கள் பெயரில் பேரம் பேசியதாக ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து திமுகவில் இணைந்தால் சுமார் ரூ.50 கோடி தருவதாக கூறினர். திமுகவில் வந்தால் அமைச்சர் பதவி தருவதாக பேரம் பேசினர். அனிதா ராதாகிருஷ்ணன் ஆட்கள் என்னிடம் பேரம் பேசினர். பேரத்துக்கு இணங்காவிட்டால் என்ன செய்வோம் என்று தெரியாது என மிரட்டினர். பதவியை ராஜினாமா செய்து திமுகவில் இணையும்படி என்னிடம் அக்கட்சியினர் பேரம் பேசினர். ஸ்ரீவைகுண்டத்தில் எனது வெற்றியால் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக, அதிமுக, பாஜக இணைந்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் தன்னிடம் பேரம் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்றையும் ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் வெளியிட்டார்.
ஏற்கனவே தவெக எம்.எல்.ஏ இளையராஜா அளித்த பேரம் புகாரில் சுமார் 10 பேர் கைதான நிலையில் புதிய புகார் ஒன்று வந்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.