தென்காசி:டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலி
1 min read
Tenkasi: Another woman dies of dengue fever
19/8/2026
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இலங்கை தமிழர் முகாமில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலியானார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா போகநல்லூர் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 50-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இங்குள்ள ராஜன்-சைலா ஸ்ரீ தம்பதியின் மகள் ரிஹானா மேரி (வயது 13) என்ற சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சமீபத்தில் உயிரிழந்தார்.
இந்நிலையில் தினேஷ் மனைவி நர்மளா (27) என்பவரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் நர்மளா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இலங்கை தமிழர் முகாம் அருகில் வெளியூர்களில் இருந்து குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். அவற்றை தீ வைத்து எரிப்பதால் சுகாதாரக் கேடாக உள்ளது. எனவே குப்பைகளை அகற்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.