August 20, 2026

Seithi Saral

Tamil News Channel

மேகதாது அணை கட்ட திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை கர்நாடகம் தாக்கல்

1 min read

Karnataka submits revised Detailed Project Report for the construction of the Mekedatu dam.

20/8/2026
மேகதாது திட்டத்துக்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ளது. இதில் 8.90 லட்சம் மரங்கள் வெட்டப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் 67 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) கொள்ளளவு கொண்ட புதிய அணையை கட்ட தீர்மானித்துள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மேகதாது திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை (டி.பி.ஆர்.) மத்திய அரசுக்கு கர்நாடக அரசு அனுப்பியது.

இதில் ரூ.9 ஆயிரம் கோடியில் மேகதாது அணை கட்டப்பட உள்ளதாகவும், பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காகவும், 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்ட அறிக்கையில் சில தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகள் இருப்பதாகவும், அதை திருத்தி மீண்டும் திட்ட அறிக்கையை அனுப்புமாறும் கூறி மத்திய அரசு திருப்பி அனுப்பியது.

இந்த நிலையில் கர்நாடக அரசு திருத்தப்பட்ட மேகதாது திட்ட அறிக்கையை மீண்டும் மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் மேகதாது திட்டத்தால் 12 ஆயிரத்து 500 ஏக்கர் வனப்பகுதி நீரில் மூழ்குவதாகவும், அதற்கு இணையாக தட்சிண கன்னடா, சிவமொக்கா உள்ளிட்ட சில பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வனத்துறைக்கு ஒதுக்க அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேகதாது பகுதியில் 8.90 லட்சம் மரங்கள் வெட்டி அகற்றப்படும். இதில் 7 லட்சம் மரங்கள் சிறியவை என்றும், 1 லட்சம் மரங்கள் பெரிய வகையை சேர்ந்தவை என்றும் கண்டறியப்பட் டுள்ளது. மேகதாது திட்டத்தின் மூலம் பெங்களூருவின் குடிநீர் தேவைக்கு 4.75 டி.எம்.சி. நீர் பயன்படுத்தப்படும் என்றும் திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட விரிவான மேகதாது திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளதாக நீர்ப்பாசனத்துறை மந்திரி செலுவராயசாமி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அடுத்த ஆண்டு (2027) ஆகஸ்டு மாதத்துக்குள் இந்த திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

கர்நாடக அரசு ஏற்கனவே மேகதாது திட்டத்தை அமல்படுத்துவதற்கான தனி அலுவலகம், அதிகாரிகள் குழு ஆகியவற்றை நியமித்துவிட்டது. இந்த குழுவினர் தங்களுக்கான பணிகளை செய்து வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *