இந்தியாவில் டெங்கு காய்ச்சல் தடுப்பூசி அடுத்த ஆண்டு அறிமுகம்
1 min read
Dengue vaccine to be launched in India next year.
19.9.2026
இந்தியாவில் டெங்கு காய்ச்சலுக்கான முதல் தடுப்பூசி அடுத்த ஆண்டு அறிமுகம் ஆகிறது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
டெங்கு நோய்த்தடுப்பு, கட்டுப்பாடு ஆகியவற்றுக்கான இந்தியாவின் முயற்சிகளை வலுப்படுத்துவதின் முக்கிய நடவடிக்கையாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம், ஜெர்மனியின் டகேடா ஜி.எம்.பி.எச். நிறுவனம் தயாரித்துள்ள டெங்கு டெட்ராவேலண்ட் தடுப்பூசிகளை (கியூடெங்கா) இறக்குமதி செய்து சந்தைப்படுத்துவதற்கு கடந்த ஜூலை மாதம் அனுமதி அளித்தது.
இது நாட்டில் டெங்கு காய்ச்சல் தடுப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட முதலாவது தடுப்பூசி ஆகும். மருந்துகள், அழகுசாதனப்பொருட்கள் சட்டம்-1940 மற்றும் மருந்து விதிமுறைகள்-1945 ஆகியவற்றின்படி தடுப்பூசிகளின் தரம், பாதுகாப்பு, திறன் ஆகியவற்றின் விரிவான அறிவியல் ரீதியான மதிப்பீட்டுக்குப் பிறகே இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த தடுப்பூசியை 4 வயது முதல் 60 வயது வரையிலானவர்களுக்கு செலுத்தலாம். இதன் செயல்திறன் குறித்து பிரேசில், தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் 4 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு 3 கட்டங்களாக இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. டெங்கின் 4 வகைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது.
இத்தடுப்பூசிக்கு ஏற்கனவே ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், சுவிட்சர்லாந்து, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 42 நாடுகளில் ஒப்புதல் கிடைத்துள்ளது. அத்துடன் உலக சுகாதார அமைப்பின் முன் தகுதியையும் பெற்றுள்ளது. உலகம் முழுவதும், 2.4 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வினியோகிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் இதனை சந்தைப்படுத்துவதற்கும், வினியோகிப்பதற்குமான உரிமையை ஐதராபாத்தின் டாக்டர் ரெட்டிஸ் லேபரிட்டரிஸ் நிறுவனம் பெற்று இருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கையெழுத்தானது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் இந்த தடுப்பூசி சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை விவரம் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
இதுபற்றி, டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் நிறுவனம், “2027-ம் ஆண்டின் முதல் பாதியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும், இந்தியாவின் முதல், அங்கீகாரம் பெற்ற டெங்கு தடுப்பூசியான கியூடெங்காவை சந்தைப்படுத்தவும், வினியோகிக்கவும் டகேடா நிறுவனத்துடன் நாங்கள் ஒரு பிரத்தியேக ஒப்பந்தம் செய்துள்ளோம்” என சமூக வலைத்தள பதிவு ஒன்றில் தெரிவித்து உள்ளது.