தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது- வெளிநாட்டு நிதி அதிகரிப்பு
1 min read
Number of NGOs halved – Foreign funding increased
20.9.2026
இந்தியாவில், கடந்த 10 ஆண்டுகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளன. இருப்பினும், வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் மொத்த நிதியின் அளவு அதிகரித்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் மத்திய உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையிலான அதிகாரிகள் குழு தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்தியாவில், கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் (எப்.சி.ஆர்.ஏ) கீழ் பதிவு பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 22 ஆக இருந்தது. தற்போது அவை 14 ஆயிரத்து 466 ஆக குறைந்துள்ளன.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்த போதிலும், வெளிநாட்டு நிதிவரத்து 2015-16-ம் ஆண்டில் ரூ.17 ஆயிரத்து 832 கோடியில் இருந்து, 2024-25-ம் ஆண்டில் ரூ.22 ஆயிரத்து 974 கோடியாக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக தமிழகத்தில் 2 ஆயிரத்து 102 தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், மராட்டியத்தில் 1,578-ம், கர்நாடகாவில் 1,355-ம் செயல்படுகின்றன. நிதி பெறுவதில் டெல்லி முதலிடத்தில் உள்ளது.
இதில், அமெரிக்கா அதிகபட்சமாக ரூ.12 ஆயிரத்து 113 கோடியும், இங்கிலாந்து ரூ.2 ஆயிரத்து 414 கோடியும் நிதியாக வழங்கியுள்ளன. சமூகப் பணிகள் மற்றும் கல்வித் துறைகளுக்கே அதிக நிதி பெறப்பட்டுள்ளது.
2024-25-ம் ஆண்டு நிதியாண்டில் பெறப்பட்ட நிதியில், கிறிஸ்தவ அமைப்புகள் ரூ.1,345 கோடியும், இந்து அமைப்புகள் ரூ.328 கோடியும் பெற்றுள்ளன.
இந்த நிலையில் விதிமுறைகளை மீறியும், ஆண்டு கணக்கை சமர்ப்பிக்காமலும் இருந்த 21 ஆயிரத்து 983 தொண்டு நிறுவனங்களின் எப்.சி.ஆர்.ஏ. பதிவு இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குபடுத்துதல் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சிறுபான்மை அமைப்புகளை இது இலக்கு வைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், வெளிநாட்டு நிதியை தவறாகப் பயன்படுத்துபவர்களையும், மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களையும் கட்டுப்படுத்தவே இந்தச் சட் டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.