ஐ.ஏ.எஸ். அதிகாரி மனைவி ‘பிளேடால்’ கழுத்தை அறுத்து தற்கொலை
1 min readI.A.S. Officer’s wife ‘Platol’ commits suicide by slitting her throat
3.11.2021
ஐ.ஏ.எஸ். அதிகாரியான பத்திரப்பதிவுத்துறை தலைவரின் மனைவி, ‘தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என கடிதம் எழுதி வைத்துவிட்டு, ‘பிளேடால்’ கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி
சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சிவன் அருள். இவரது மனைவி சுமதி (வயது 53). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவன் அருள் சென்னை சாந்தோமில் உள்ள தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறை தலைவராக (ஐ.ஜி) பணியாற்றி வருகிறார்.
இவரது மகள் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்து வருகிறார். மகன் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சிவன் அருளின் மனைவி, கடந்த 2 ஆண்டுகளாக மன அழுத்தத்துக்கான சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இவரை கடந்த 6 மாதங்களாக அவரது மகள் தான் உடன் இருந்து கவனித்து வந்துள்ளார்.
வீட்டில் தனியாக இருந்தார்
நேற்று காலை, சிவன் அருள் வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டார். அவரது மகனும் கல்லூரிக்கு சென்று விட்டார். மேலும் சுமதியை உடன் இருந்து கவனித்து வந்த மகள் வெளியே சென்று விட்டார். அப்போது வீட்டில், சுமதி மற்றும் வீட்டு வேலை செய்யும் பணிப்பெண் ஆகியோர் மட்டும் இருந்துள்ளனர்.
தற்கொலை
இந்தநிலையில், சுமதி நேற்று காலை குளியல் அறைக்குள் சென்றுள்ளார். வெகுநேரமாகியும், குளியல் அறையில் இருந்து சுமதி வெளியே வராததால், சந்தேகமடைந்த வீட்டு வேலைக்கார பெண், கதவை தட்டினார். ஆனால் கதவை சுமதி திறக்கவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது சுமதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். அவரது அருகிலும், பிளேடு ஒன்று கிடந்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து, அவரது கணவர் சிவன் அருளுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த ஐஸ்அவுஸ் போலீசார், குளியல் அறையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சுமதியின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அவரது படுக்கை அறையில் இருந்த கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அதில், ‘மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ எனவும் சுமதி எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், கடந்த 2 ஆண்டுகளாக மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்று வந்த சுமதி, பிளேடால் தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.