June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

அவள் யாருக்கு? (ஆசிரியர் கடையம் பாலன்) தொடர் கதை பகுதி 18)

1 min read
Aval Yarukku? Novel episode 18- By kadayam Balan- கடையம் பாலன்

Aval Yarukku? Novel episode 18- By kadayam Balan

உடல்நலம் பாதிக்கப்பட்ட தெய்வாவின் தந்தை பூரண குணம் அடந்தார். இழந்த சொத்தும் மீண்டும் கிடைக்க, அவர்கள் எல்லோரும் சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட தயாரானார்கள். மதுரையில் நடக்கும் தங்கள் இல்ல விழாவுக்கு தன் நட்பு வட்டாரங்களை தெய்வா அழைத்தாள். அவர்களிடம் விழாவுக்கு “எங்க அப்பாவும் கண்டிப்பா வருவாங்க. உங்களை அறிமுகப்படுத்தறேன்.” என்றாள்


தெய்வாவின் நட்பு வட்டாரங்கள் ரெயிலில் மதுரைக்கு புறப்பட உள்ள நிலையில் நான்கு நாட்களுக்கு முன்னதாக தெய்வா தனது தந்தையுடன் காரில் மதுரைக்கு புறப்பட்டார். இப்போதும் உதவிக்கு அவர்களுடன் காரில் சென்றான்.
காரில் டிரைவர் சீட்டுக்கு அருகில் முருகன் அமர்ந்து கொள்ள, பின் இருக்கையில் தந்தையுடன் தெய்வா அமர்ந்திருந்தாள்.
அன்றைய தினம் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தபோது இருந்த சோக உணர்வு இப்போது தெய்வாவிடம் இல்லை. தந்தை பூரண குணம் அடைந்த மகிழ்ச்சி, சொத்து பிரச்சினை தங்களுக்கு சாதகமாக முடிந்த மகிழ்ச்சி அவளின் முகத்தில் தெரிந்தது. ஆண் பிள்ளை இல்லாத வீட்டில் மகனாகவும் மகளாகவும் நின்று தந்தைக்கு ஆற்றிய கடமையை நினைத்தால் தெய்வா தனக்குத்தானே பெருமைபட்டுக் கொண்டாள்.
ஒரு பையன் இருந்திருந்தால்கூட இப்படி செய்திருப்பானா என்பது சந்தேகம்தான். தன் இளைய மகளின்(தெய்வா) தோளில் கையைப்போட்டு ஆனந்த கண்ணீர் வடித்தார் அவளது தந்தை. இரண்டு குழந்தைகள் போதும் என்ற நினைப்பில் இருந்த அவளது தந்தைக்கு இரண்டும் பெண்ணாக பிறந்ததால் மூன்றாவது குழந்தைக்கு ஆசைப்பட்டார். அந்தக் குழந்தையும் பெண்ணாகப் பிறக்கவே அத்துடன் நிறுத்திக் கொண்டார். ஆனாலும் ஆண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் அப்போது இருந்தது. பிறந்து சில வருடங்கள் வரை அந்த பெண் குழந்தை(தெய்வா) மீது நெருக்கமான பாசம் இன்றியே இருந்தார். அந்த நாளை இப்போது நினைத்து தன்னைத்தானே வெறுத்துக் கொண்டார். அன்று பெண் குழந்தை பிறந்ததால் கடவுளை திட்டிய அவர், இப்போது பெண் குழந்தையை தந்ததற்காக கடவுளுக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும் கடவுளை திட்டியதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
கடவுள் எதையும் காரணம் காரியம் இன்றி செய்ய மாட்டார். மூத்த பெண்களால் ஏற்பட்ட தலைகுனிவை போக்கு தந்தையின் கவுரவத்தை நிலைநாட்டவே கடவுள் தெய்வாவை கொடுத்திருக்கிறார்.
“தெய்வா பழைய பங்களாவை சுத்தம் செய்து பெயிண்டு அடிக்கச் சொன்னியா?”
“எல்லாம் சொல்லியாச்சி அப்பா, வேலைய இன்னிக்கு தொடங்கிட்டாங்க.”
“அப்புறம் நம்ம நெருங்கின சொந்தக்காரங்களுக்கு போன்ல தகவல் சொல்லி வரச் சொல்லு.”
“சரிப்பா.”
“முருகா நீ எனக்கு மட்டுமல்ல எம்மகளுக்கும் ரொம்பவே உதவி பண்ணி இருக்கப்பா. உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.”
“நன்றியா… எனக்கா… அப்போ எங்க அப்பாவுக்கு நீங்க செஞ்ச உதவிக்கு என்ன சொல்றது.”
“என்னப்பா உங்க அப்பாவும் நானும் நண்பர்கள். இந்த காலத்து பையங்க இப்படி உதவி பண்ணுவாங்களா. அதுக்கெல்லாம் பெரிய மனசு வேணும். உனக்கு ஏதாவது செய்தாகணும்.”
“ஆமா ஆமா உங்ககிட்ட பெரிய உதவி கேட்கப்போறேன்.”
“அப்பா இவருக்கு, ஒரு புதிய காண்டிராக்ட் கிடைச்சிருக்கு. அதுக்கு டெபாசிட் செய்ய பணம் புரட்டணும்ன்னு போன வாரம் சொன்னாரு. அந்த உதவிய நீங்க செய்யுங்கப்பா.”
“தெய்வா, நான் கிண்டலுக்குத்தான் அப்படி சொன்னேன். எனக்கு பணம் கொடுத்து என்னை விலக்கி வைச்சிடாதீங்க.”
“என்னப்பா எனக்கு ஒரு மகன் இருந்தா பணம் கொடுக்க மாட்டோமா.”
“அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். பணத்துக்காக லோன்அப்ளை பண்ணியிருக்கேன். கூடிய சீக்கிரம் கிடைச்சிடும்.”
-&பேச்சிக்கு இடையே அவ்வப்போது தந்தைக்கு குளுக்கோஸ், மாத்திரையை தெய்வா கொடுத்து வந்தாள்.
“தெய்வா உனக்கும் காலாகாலத்தில ஒரு கல்யாணத்தை பண்ணணும். உங்க அம்மா இருந்தா என்னைக்கோ என்னை பாடாப்படுத்தி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி இருப்பா.”
“அப்பா இப்போதான் பெரிய பிரச்சினையில இருந்து நாம வெளியில வந்திருக்கோம். அம்மா இல்லாத குறை ஒண்ணுதான். கொஞ்சநாள் ஜாலியா இருப்போம்.”
“என்ன கல்யாணங்கிறது ஜாலி இல்லியா?”
“கல்யாணம் ஜாலின்னு யாருமே சொல்லலியே. அது ஒரு கால்கட்டுன்னுதானே சொல்றாங்க.”
“அந்த கால்கட்டுலயும் ஒரு சுகம் இருக்கு. நமக்கு இது வரைக்கும்தான் பணம் இல்லாம இருந்தது. இனி அந்தக் கவலை வேண்டாம்.”
“அப்பா இப்போ அது வேண்டாம். முதல்ல வீட்டு வேலையையும், விழாவையும் முடிச்சிடுவோம்.”
&தந்தைக்கும் மகளுக்கும் நடந்த உரையாடலை முருகன் அமைதியாக கேட்டுக் கொண்டே வந்தான்.
கார் மேலூரை தாண்டி வந்தது. டிரைவர் காரை ஓரம் கட்டி டீக்குடிக்க சென்றார். முருகனும் அவனுடன் சென்றான்.
தெய்வா உனக்கு காபி ஏதாவது வேண்டுமா?
இல்லை.. வீட்ல போய் சாப்பிட்டு கொள்கிறேன்.
அவர்கள் இருவரும் சிற்றுண்டி கடைக்குச் செல்ல காரில் தந்தையும் மகனும் அமர்ந்திருந்தனர்.
போகும்போதே நாம பழைய பங்களாவை போய் பார்க்கலாமா என்று கேட்டார் தந்தை.
வேண்டாம்ப்பா. அங்கே வெள்ளை அடிக்கிற வேலை நடக்கிறதால ஒரே தூசியாக இருக்கும். வேலை முடிஞ்சப்பிறகு நீங்க வாங்க.
அப்புறம் வெளிப்புறம் பெயிண்ட் லைட் புளு கலரு அடிக்கச் சொல்லு. அதுதான் உன் ராசிக்கு பொருத்தமான கலர்.
உங்க ராசிக்கு எந்த கலர் பொருத்தம்பா.
இனிமே எல்லாமே உனக்குத்தாம்மா.
என்னிக்குமே நீங்கத்தான் நம்ம வீட்டுக்கு தலைவர்.
இதற்குள் டிரைவரும் முருகனும் வர கார் மீண்டும் புறப்பட்டது. அடுத்த அரை மணி நேரத்திற்குள் வீட்டை வந்தடைந்தார்கள்.
கார் கதவை திறந்து தெய்வா தன் தந்தையை கைத்தாங்கலாக வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். அங்கு முருகனின் அம்மாவும் அப்பாவும் ஏற்கனவே வந்து வீட்டை ஓரளவு சுத்தம் செய்து வைத்திருந்தனர். பால் வாங்கி காபி போட்டு தயாராக வைத்திருந்தனர். அதை அனைவரும் பருகினார்கள். பின்னர் குளித்து வீட்டில் விளக்கேற்றி தந்தையும் மகளும் சாமி கும்பிட்டனர். அம்மா படத்தின் முன்பு நின்று தெய்வா வணங்கினாள். அப்போது அவளது தந்தையின் கண்களிலல் கண்ணீர் வடிந்தது.
அதற்குள் அக்கம் பக்கத்தினர் வந்து நலம் விசாரித்துச் சென்றனர். அவர்களுக்கு தெய்வா காபி கொடுத்தாள். ஒரே பெண்ணாக நின்று இத்தனை காரியங்களை செய்து முடித்த தெய்வாவை அவர்கள் புகழ்ந்து தள்ளினார்கள்.
வறண்ட குளத்திற்கு தண்ணீர் வந்ததும் கொக்கும், நாரையும் படையெடுத்து வருவதுபோல மறந்திருந்த உறவுகள் இப்போது நலம் விசாரிக்க வந்தது. இதை எல்லாம் அறிந்திருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தெய்வாவும் அவளது தந்தையும் அவர்களிடம் சகஜமாக பேசினார்கள்.
முருகனின் தாய் தற்செயலாக வெளியே வர அங்கே தெய்வாவின் அக்காள் காவியா, திவ்யா நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை முருகனின் தாய்க்கு அடையாளம் தெரியவில்லை. யாரோ நலம் விசாரிக்க வந்தவர்கள் என்று கருதி “வாங்கம்மா உள்ளே வாங்க..” என்று அழைத்தாள்.
ஆனாலும் அவர்கள் உள்ளே வர அஞ்சியபடி வெளியே நின்று கொண்டிருந்தனர்.
“எப்பா முருகா இங்கே 2 பிள்ளைங்க வெளியில நிற்குது. உள்ளே கூப்பிட்டா வர மாட்டேங்கிறாங்க. வந்து பாருப்பா..”
முருகன் வரவே அவனுக்கு அடையாளம் தெரிந்து விட்டது. அவர்களிடம் போலியான புன்முறுவலை காட்டிவிட்டு உள்ளே சென்றான். அங்கே தெய்வாவை தனியாக அழைத்து விவரத்தை கூறினான்.
அவள் அதிர்ந்து விட்டாள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. கண்ணீர் தாரைதாரையாக கொட்டியது. தலையை நிமிர்ந்துபார்த்தபோது அவளது அம்மா போட்டோ கண்ணில் பட வாய்விட்டு அழுதுவிட்டாள். உள்ளே இருந்த தந்தைக்கு தான் அழுவது தெரியக்கூடாது என்பதை உணர்ந்த அவள் அழுகையை அடக்கிக் கொண்டாள். அழுகை விம்மலாக மாறி, பின்னர் அந்த விம்மல் ஆக்கிரோஷமாக மாறியது.
வெளியே வந்த அவள் அக்காள்கள் இருவரையும் பார்த்து, “இங்கே ஏன் வந்தீங்க?” என்று கத்தினாள்.
தன்னைவிட எத்தனை வயசு குறைஞ்சவள் இப்படி பேசியதை மூத்தவள் காவியாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
“ஏண்டி நீ யாரு என்னை கேட்க” என்று பதிலுரைத்தாள்.
“உங்களாலத்தானே அம்மா இறந்து போனாங்க. அப்பாவும் உடம்பு சரியில்லாம படுத்திட்டாங்க. இப்பத்தான் உடம்பு நல்லாகி வந்திருக்காங்க. அது உங்களுக்கு பொறுக்கலையா?”
“ஏய் என்னடி வாய் நீளுது. அடக்கி பேசு. அப்பாக்கிட்ட நாங்க வந்திருக்கிறதா போய் சொல்லு.”
&அப்பா இவர்களை பார்த்தால் அதிர்ச்சி அடைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் ஆச்சிரியம் இல்லை. ஆதனால இவர்களிடம் கோபப்படாமல் அனுப்பி வைக்க முடிவு செய்த தெய்வா, சற்று அமைதியாக பொறுமையாக பேசினாள்.
“இதோ பாருங்க உங்க மேல உள்ள கோபம் அப்பாவுக்கு இன்னும் போகல. நம்ம சொத்து எல்லாம் திரும்ப கிடைச்சிட்ட தகவல் கிடைச்சி வந்திருக்கீங்க. அப்பாக்கிட்ட பேசி உங்களுக்கு உரிய பங்க நானே வாங்கித் தாரேன். இப்போ நீங்க போயிட்டு வாங்க.” என்றாள் தெய்வா.
“நான் ஒண்ணும் சொத்துக்காக வரல. அப்பாவை பார்கணும். நான் பார்க்க வரலைன்னா என்னைபத்தி ஊரு என்ன சொல்லும்?” என்றாள் காவியா.
“இதோ பாரு அப்பாகிட்ட போய் சொல்றேன். அவங்க சரின்னு சொன்னா உங்களை உள்ளே அழைச்சிட்டுபோறேன்.” என்று சொல்லியபடி, முருகனை அழைத்து அப்பாவிடம் விவரத்தை கூறும்படி சொன்னாள்.
முருகன் உள்ளே சென்று சுமார் 15 நிமிடம் கழித்து வந்தான். கையில் தெய்வா தந்தையின் பாஸ்போர்ட்டு சைஸ் புகைப்படத்தை வைத்திருந்தான்.
“உங்க அப்பாக்கிட்ட நீங்க அவரை பார்க்கணும்ன்னு சொன்னேன். அதற்கு இந்த போட்டோவை கொடுத்து இதை பார்த்துக்கோங்கன்னு சொல்ல சொன்னார்.”
&இப்படி முருகன் சொன்னதும் காவியா கொதித்து எழுந்தாள்.
“எங்க அப்பாவை மறைச்சி வைச்சிக்கிட்டு நாடமாக ஆடறீங்க? நான் எங்க அப்பாவை பார்க்காமல் இந்த இடத்தைவிட்டு போகமாட்டேன்” என்று சொல்லலியபடி வீட்டுக்குள் நுழைந்தாள். அவளுடன் திவ்யாவும் உள்ளே சென்றாள்.
அங்கே அவர்களின் தந்தை நாற்காலியில் தலையணையைப்போட்டு அதில் அமர்ந்திருந்தார். மகள்களை கண்டதும் கண்களை மூடிக்கொண்டார். இடது கையை தூ-க்கி நிறுத்தினார்.
“அப்பா” என்று இரண்டு மகள்களும் அழுதனர்.
“செத்துபோயிட்டேன்னு அழுதீங்களா? அழாதீங்க… என்னை பார்க்கத்தானே வந்தீங்க. தாராளமா பார்த்துக்கோங்க. ஆனா உங்கள பார்க்க நான் விரும்பல. அதனாலத்தான் கண்களை மூடிக்கொண்டேன். என்னுடைய சொத்து மீண்டும் கைக்கு கிடைச்சிட்டுது. உங்களுக்கு உரிய பங்கு கண்டிப்பா உங்களுக்கு கிடைக்கும். அந்த பங்களா பங்கு தெய்வாவுக்குத்தான் உண்டு.”
“அப்பா எங்கள மன்னிச்சி ஏத்துக்கோங்க..”
“உங்களை நான் மன்னிக்கலாம். எனக்கும் உங்களை மன்னிச்சி கட்டிபிடித்து அழணுன்னுதான் தோணுது. அப்படி நான் செஞ்சா அநியாயத்துக்கு துணை போறதா ஆயிடும். உங்களை நான் ஏத்துக்கிட்டா தெய்வா செய்த தியாகத்துக்கும் அவளுடைய கட்டுப்பாட்டான நடவடிக்கைக்கும் மரியாதை இல்லாம போயிடும். அதனால நீங்க போகலாம்.”
“அப்பா…”
“நான் கண்ணை திறக்கணும். சீக்கிரம் போங்க..”
அதன்பின் காவியாவும், திவ்யாவும் மவுனமாக வெளியேறினார்கள்.
வெளியே சென்றபின் திவ்யா திரும்ப வந்து, தெய்வாவை அழைத்தாள். “தெய்வா நம்ம சொத்து எப்போ கிடைக்கும்ன்னு சொல்லி அனுப்பு. நான் வந்து வாங்கிக்கிறேன்.”
முகத்தை பார்க்காமல் “சரி சரி” என்றாள் தெய்வா.
அவர்கள் இருவரும் சென்றபின்னர், தெய்வா தன் தந்தையிடம், “அப்பா எனக்காகத்தான் அவங்களை ஏத்துக்கலியா. உங்களுக்கு விருப்பம் இருந்தா பேசுங்க. நான் கவலைப்பட மாட்டேன்.” என்றாள்.
“இல்லை தெய்வா. நான் உனக்காக அவங்க மேல கோபப்படலை. உன் சத்தியத்திற்கு மதிப்பு கொடுத்து கோபப்பட்டேன். என் காலத்து வரைக்கும் அவர்களிடம் பேச மாட்டேன். அவங்க செய்த தப்புக்கு நான் பேசாததுதான் தண்டனை. ஆனால் என் காலத்துக்கு பிறகு அவங்களை நீ மன்னிச்சி ஏத்துக்கணும். ஏன்னா உனக்கும் சொந்தம்&பந்தம் வேணும். நான் சொன்ன வாக்கை நீ மீற வேண்டாம்.”
தெய்வா தந்தையின் நெஞ்சில் தலை வைத்து தந்தைக்கு கண்ணீர் மூலம் சம்மதம் தெரிவித்தாள்.


மதுரை மாநகரில் அந்த பங்களா புதுப்பொலிவுடன் காட்சி தந்தது. பழைய முதலாளி தன்னிடம் வந்து சேர்ந்த மகிழ்ச்சியில் வீடு புன்னகை பூத்திருந்தது. பரந்து விரிந்த ஹாலில் யாகக்குண்டத்தின் புகை மூட்டம் நிரம்பி இருந்தது. பூஜைகளை முடித்துவிட்டு «-வதவிற்பனர்கள் வெளியே சென்ற பின்னர் தெய்வாவின் தந்தை விருந்தினர்களை வரவேற்றார். சென்னையில் தனக்கு உதவியவர்களை தெய்வா அறிமுகப்படுத்தினாள்.
தெய்வாவின் தந்தையை முதன்முறையாக பார்த்தனர். ஒருகாலத்தில் நல்லா வாட்டச்சாட்டமாக இருந்த அவர் தற்போது உடல் மெலிந்து விட்டதாக தெய்வா தெரிவித்தாள். இந்த நிலையிலும் தெய்வாவின் முகச்சாயலை ஒட்டி இருந்தார்.
தெய்வாவுக்கு உதவியவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். அதற்கு அவர்கள் அனைவரும் தெய்வா செய்த உதவிக்கு எதுவும் ஈடு இணை ஆகாது என்று கூறியதோடு தெய்வா போன்ற மகளை பெற்றதற்கு உங்களுக்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றனர்.
பின்னர் தெய்வா மதுரையில் உள்ள தோழிகளை அறிமுகப்படுத்திவிட்டு அவர்களுடன் சிறிது பேசிக்கொண்டிருந்தாள். அக்கம்பக்கத்தார் தெய்வாவிடம் உன்னை இரண்டு வயசுல பார்த்தது, என்னை நினைவிருக்கிறதா என்று கேட்டனர்.
அந்த நேரத்தில் சென்னை நண்பு வட்டாரங்கள் தெய்வாவின் தந்தையை தனியாக சந்தித்தனர்.
“ஐயா உங்க மகளுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க. அவளுடைய கல்யாணத்தை பார்க்க ரொம்ப ஆசையா இருக்கு” என்றனர்.
“இப்போதானே கரைசேர்ந்திருக்கோம். இனிமே நல்ல பையனா பார்த்து கல்யாணத்தை நடத்த வேண்டியதுதான்” என்றார்.
“உங்களுக்கு முருகன் உதவினாரே. அவரு சொந்தமா?”
“முருகன் இல்லாட்டி இப்போ நான் உயிரோட இருந்திருப்பேனான்னு சந்தேகம். அவன் அந்த அளவுக்கு உதவினான். அவன் எனக்கு சொந்தம்தான். அவனோட அப்பா எனக்கு பிரண்ட்” என்றார் தெய்வாவின் தந்தை.
“தப்பா நினைக்காதீங்க… அவரை உங்க மகளுக்கு கல்யாணம் செய்து வைக்கலாமே எங்களுக்கு ஆசை.”
“தெய்வா இதைப்பற்றி எங்கிட்ட சொல்லலியே”-
“அய்யய்யோ அவளுக்கு இது தெரியாது. எங்களுக்குத்தான் அப்படி ஒரு ஆசை.”

(தெய்வாவுக்கும் முருகனுக்கும் கல்யாணம்… உற்றாரின் இந்த ஆசை நிறைவேறுமா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் )
கதையை உனடியாக படிக்க… ஷ்ஷ்ஷ்.ணீனீணீக்ஷ்ஷீஸீ.வீஸீ இணைய தளத்தில் பணம் கட்டி படிக்கவும்.)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.