ஏடிஎம் மெஷினில் ரகசிய கருவி வைத்த நைஜீரிய இளைஞர் கைது
1 min read22.2.2020
Nigerian youth arrestedபுதுச்சேரி லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் ஒருவர் பணம் எடுக்க சென்றார். அப்போது அந்த ஏடிஎம் மெஷினில் பாஸ்வேர்ட் பதிவு செய்யும் பகுதியில், மர்ம அட்டை ஒன்று ஒட்டப்பட்டிருப்பதை பார்த்தார்.
உடனே அந்த அட்டையை எடுத்து பார்த்தபோது, அதில் மெமரி கார்டு, சிப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் இருந்தன. உடனே அதை வீடியோவாக பதிவு செய்து, சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டார்.
இது தொடர்பாக ஏடிஎம் மைய ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் கொடுத்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நைஜீரியா நாட்டை சேர்ந்த ஜேஷர்செலஸ்டின்(28) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னையில் பதுங்கியிருந்த அவரை சைபர் கிரைம் பிரிவு போலீசார் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர். மேலும் அவரிடம் இருந்து லேப்டாப், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால் கூறுகையில், ஏடிஎம் மையத்தில் வாடிக்கையாளர் தகவல்களை திருட கருவிகளை பொருத்திய மரைன் இன்ஜினீயரான நைஜீரியா இளைஞர் ஜேஷர் செலஸ்டின் என்பவரை சென்னையில் கைது செய்துள்ளோம். அவரிடமிருந்து லேப்டாப், போலி ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய பல்கேரியாவை சேர்ந்த மிலன் அலெக்சாண்ட்ரவ், வெனிசுலாவை சேர்ந்த மில்டன் விளாடிமர் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். ஏடிஎம் மையத்தில் ரகசிய எண்ணை பதிவிடும் இடத்தில், ரகசிய சாதனத்தை பொருத்தி அதன் மூலம் கண்டறிந்து பணம் திருடும் வெளிநாட்டு கும்பல் இது. சென்னையிலிருந்து காரில் புதுச்சேரி வந்து இச்சாதனத்தை ஏடிஎம் மையத்தில் பொருத்தியுள்ளனர், என்றார்.