நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு -பிரதமர் மோடி அறிவிப்பு
1 min read24.3.2020
புதுடெல்லி: பிரதமர் மோடி 24ம் தேதி இரவு 8மணிக்கு டெலிவிஷனில் கொரோனா பாதிப்பு குறித்து பேசினார். அப்போது இன்று (24ம் தேதி ) நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று கூறினார். அவர் பேசியதில் முக்கிய அம்சங்கள்.
முழுமையான பொறுப்போடு ஒரு நாள் சுய ஊரடங்கை ஒவ்வொரு இந்தியனும் கடைபிடித்தார்கள். பெரிய இன்னலை எப்படி சமாளிப்பது என்பதை நாம் நிரூபித்தோம்.கொரோனாவை அலட்சியப்படுத்தக்கூடாது; நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஊரடங்கை கடைபிடித்தனர். ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி ஊரடங்கில் பங்கேற்றனர். கொரோனாவுக்கு எதிராக போரிட அனைவரும் ஒன்று திரண்டனர்.
இன்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு கொண்டுவரப்படுகிறது.
நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது.
மருத்துவர்கள் தவிர வேற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை. 21 நாட்கள் அடங்கி இருக்காவிட்டால் 21 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடுவோம்.
ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம்; எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும். உறவினர்கள் உட்பட யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம்.
காட்டுத்தீ போல கொரோனா வேகமாக பரவி வருகிறது. 21 நாட்கள் தனிமை இல்லாவிட்டால் குடும்பங்கள் அழிந்துவிடும்.
நமக்கு தெரியாமலே மற்றவர்களிடம் இருந்து கொரோனா பரவி விடும். ஊரடங்கு மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் பாதுகாப்பே முக்கியம்.
நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் என கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன். வல்லரசு நாடுகளாலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை, இந்தியாவில் உள்ள விஞ்ஞான அறிவை கொண்டு கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீட்டுக்குள்ளேயே இருங்கள். வீட்டுக்குள்ளேயே தனித்து இருங்கள். நீங்களே ஒரு லட்சுமண ரேகையை போட்டுக் கொள்ளுங்கள், நீங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால். கொரோனா உங்களை தாக்கக் கூடும்.
அரசுடன் மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை 100% கட்டுப்படுத்துவது சாத்தியம். சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகள் அதனால் தான் சிரமப்படுகின்றன, மருத்துவ துறையில் சிறந்து விளங்கும் அமெரிக்கா, இத்தாலியும் திணறுகின்றன, அந்த நாடுகளில் இருந்து பெற்ற படிப்பினை மூலம், கொரோனாவை ஓரளவு தடுக்கலாம்.
கொரோனாவை தடுக்க 3 வாரங்கள் சமூக விலகல் என்பது மிக முக்கியம், சுகாதாரமாக இருப்பதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்துவோம். கொரோனா சிகிச்சைகளுக்கான சேவையை மேம்படுத்த ரூ.15,000 கோடி ஒதுக்கீடு
கொரோனா தடுப்பு நடவடிக்கை: காவல்துறையினர் உள்ளிட்ட சேவை பணியாளர்களுக்கு நன்றி தெரிவியுங்கள்.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிரமங்களையும் உணருங்கள். 24 மணி நேரமும் பணியாற்றும் ஊடகத்தினருக்காகவும் பிரார்த்தியுங்கள்.
நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும்.
அடுத்த 11 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேரை தாக்கும், இதன் மூலம், கொரோனா எவ்வளவு வேகமாக பரவும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம், கொரோனா பரவத் தொடங்கினால், அதை தடுத்து நிறுத்துவது பெரிய சவால்.
21 நாட்களை ஆக்கப்பூர்வமாக மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உங்கள் வீட்டிலிருந்து நீங்கள் வெளியே சென்றால் கொரோனா உங்கள் வீட்டில் அடியெடுத்து வைக்கும்.
கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன. மக்கள் ஊரடங்கை காட்டிலும் இது கடுமையான ஊரடங்கு ஆகும்.
கொரோனா தடுப்பில் நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என நம்புகிறேன், வைரஸ் பாதிப்பு என சந்தேகம் ஏற்பட்டால் தானாகவே மருந்துகளை உட்கொள்ளக் கூடாது.
தடைகளை ஏற்று நாம் அனைவரும் ஒத்துழைத்து கொரோனா பரவலை தடுக்க வேண்டும், வதந்திகளையும், மூடநம்பிக்கைகளையும் பின்பற்ற வேண்டாம். மாநில அரசுகளின் முதல் பணி, சுகாதாரத்தை பேணி பாதுகாப்பதே, தனியார்களும் அரசுக்கு உதவ முன்வர வேண்டும்.
தெரிந்தோ, தெரியாமலோ பல வதந்திகள் பரப்பப்படுகின்றன. அவற்றை நம்ப வேண்டாம். ஏராளமானோர் உதவுவதற்கு முன்வந்து கொண்டு இருக்கிறார்கள்உலக சுகாதார மையத்தின் ஆலோசனைப்படி, மருத்துவ உதவிகள் செய்யப்படுகின்றன.