அண்ணன் மகன்களை கிணற்றில் தள்ளி கொன்ற சித்தப்பா
1 min read24.3.2020
விளாத்திகுளம் அருகே அயன்பொம்மையாபுரம் காலனி தெருவைச் சேர்ந்த அந்தோணி மகன்கள் ஜோதிமுத்து (50), ரத்தினராஜ் (40). இருவரும் லாரி டிரைவர்கள். ஜோதிமுத்துவுக்கு உஷாராணி, மகாலட்சுமி என 2 மனைவிகள். மகாலட்சுமி, உஷாராணியின் உடன்பிறந்த தங்கை ஆவார்.
ஜோதிமுத்துவுக்கு முதல் மனைவி உஷாராணி மூலம் சீமான்அல்போன்ஸ் ஜீசஸ் (14) என்ற மகனும், ஜாக்குலின் ரோஸி (13) என்ற மகளும், 2வது மனைவி மகாலட்சுமி மூலம் எட்வின் ஜோசப் (9) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் 3 பேரும் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர்.
ஜோதிமுத்துவின் தம்பி ரத்தினராஜ், சிறுவர்கள் அல்போன்ஸ் ஜீசஸ், எட்வின் ஜோசப் ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் ஊருக்கு தெற்கு பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக அழைத்துச் சென்றார். அதன்பின்னர் அவர்கள் 2 பேரும் வீடு திரும்பவில்லை. கிணற்றின் அருகே 2 சிறுவர்களின் செருப்புகள் கிடந்த நிலையில் அவர்கள் கிணற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அனைவரும் நினைத்தனர். இருவரின் உடல்கள் மீட்கப்பட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் ஜோதிமுத்துவின் தம்பி ரத்தினராஜ், 2 பேரையும் கிணற்றுக்குள் தள்ளிவிட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை விளாத்திகுளம் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ரத்தினராஜ் போலீசில் அளித்த வாக்குமூலம்:
எனது அண்ணி உஷாராணியின் தங்கை மகாலட்சுமி எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார். இதில் அவருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. அவரை நான் கோவைக்கு அழைத்துச் சென்றேன். இதையறிந்த எனது அண்ணன் கோவைக்கே வந்து எங்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அண்ணன் எங்களை கண்டித்தார். மேலும் எனக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்து விட்டு, மகாலட்சுமியை அவரே 2வது திருமணம் செய்துகொண்டார். இது எனக்கு அவர் மீது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
திருமணமான பின்னரும் நானும், மகாலட்சுமியும் நெருக்கமாக பழகி வந்தோம். வீட்டில் யாரும் இல்லாதபோது நாங்கள் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்தோம். தற்போது பள்ளி விடுமுறை என்பதால், சில நாட்களுக்கு முன் நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை அண்ணன் மகன் சீமான்அல்போன்ஸ் பார்த்து, என் அண்ணனிடமும், தாயாரிடமும் சொல்லிவிட்டான். இதனால் என்னை அனைவரும் கண்டித்தனர். அதன்பின்னர் என்னை மகாலட்சுமி புறக்கணிக்கத் தொடங்கினார்.
எனக்கும், மகாலட்சுமிக்கும் இருந்த தொடர்பால் எனது மனைவி என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் மகாலட்சுமியும் இந்த விவகாரத்திற்கு பிறகு என்னுடன் பேசாதது எனக்கு அவர் மீதும், எங்கள் மீது புகார் கூறிய அண்ணன் மகன் சீமான்அல்போன்ஸ் மீதும் ஆத்திரம் ஏற்பட்டது. 2 பேரையும் கொலை செய்ய திட்டமிட்டேன்.
இந்நிலையில் 22ம் தேதி சீமான் அல்போன்சும், எட்வின் ஜோசப்பும், என்னிடம் வந்து கிணற்றில் குளிக்க அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினர். இதுதான் அண்ணனையும், எங்களை பிரித்த சீமான்அல்போன்சையும் பழிவாங்க சரியான சந்தர்ப்பம் என்று கருதி, அண்ணன் மகன்கள் 2 பேரையும் கிணற்றில் குளிக்க அழைத்துச் சென்று அங்கு அவர்களை தண்ணீரில் தள்ளி கொலை செய்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.