சைக்கிளில் சென்று ஆய்வு பணி மேற்கொண்ட அமைச்சர் -தடுத்து நிறுத்திய போலீசார்
1 min read
3.4.2020
புதுச்சேரியில் கொரேனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில சுகாதாரத்துறை முழு கவனம் செலுத்தி வருகிறது. பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் முடுக்கி விட்டுள்ளார். மேலும் இவற்றை முதல்வர் நாராயணசாமியுடன் அவர் அவ்வப்போது ஆய்வும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் 3ம் தேதி காலை சைக்கிளில் நகரப் பகுதிகளில் உலா வந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மாநில எல்லையான கோரிமேடு வரையிலும் மாஸ்க் அணிந்தபடி சென்று வாகன ஓட்டிகளின் நடமாட்டம், காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
மேலும் துப்புரவு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா? என்பதையும் அவர் பார்வையிட்டார். கோரிமேடு எல்லையில் டி-சர்ட் அணிந்தபடி சைக்கிளில் சென்ற அவரை, அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தமிழக பாேலீசார் வழிமறித்தனர்.
அப்போது தான், புதுச்சேரி நலவழித்துறை அமைச்சர் எனக் கூறியதோடு அடையாள அட்டையை அவர் காண்பித்ததையடுத்து தமிழக போலீசார் அவரை விடுவித்தனர். பின்னர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பஸ்சில் ஏறி அமர்ந்திருந்த துப்புரவு பணியாளர்களை சந்தித்த அமைச்சர், முககவசம், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்து அதை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் புதிய பஸ் நிலையம், ராஜா தியேட்டர் வழியாக நேருவீதி மார்க்கெட் பகுதியை பார்வையிட்ட அமைச்சர் தனது இல்லத்தை சென்றடைந்தார்.