தாயின் இறுதிச்சடங்கை வீடியோவில் பார்த்து அஞ்சலி செலுத்திய எஸ்ஐ
1 min read
3.4.2020
தாயின் இறுதிச்சடங்கை வீடியோவில் பார்த்து அஞ்சலி செலுத்திய எஸ்ஐ
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், விஜயவாடாவில் எஸ்ஐ ஆக இருப்பவர் சாந்தாராம். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இவர் விஜயவாடாவில் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார். கடந்த 2நாட்களுக்கு முன்பு இவரது தாயார் விஜயநகரம் மாவட்டத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.
இதையறிந்த அதிகாரிகள், சாந்தாராமுக்கு விடுமுறை அளித்தனர். ஆனால் விடுமுறை வேண்டாம் என்று கூறிய சாந்தாராம், தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க போவதில்லை. பொதுமக்களுக்கு இக்கட்டான சூழல் உள்ள இந்நிலையில் நான் பணியில் இருந்தால்தான் எனது தாயாரின் ஆத்மா சாந்தி அடையும் என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து சாந்தாராம் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எனது தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க நான்கு மாவட்டங்களில் 45 சோதனை சாவடிகளை கடந்து செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. இங்கிருந்து நான் சென்று வருவதற்கு மூன்று நாட்கள் ஆகும். மீண்டும் நான் வந்த பிறகு பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் எனது பணியை நான் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனது சகோதரருக்கு தகவல் தெரிவித்து அவரை இறுதிச்சடங்கு செய்யும்படி கூறி அதன் வீடியோவை பார்த்து எனது தாயாருக்கு அஞ்சலி செலுத்தினேன். எனவே, பொதுமக்களும் அவரவர் வீடுகளிலேயே வரும் 2 வாரங்கள் இருந்து ஊரடங்கை வெற்றி பெற செய்தால் வைரஸ் பரவாமல் தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.