தண்டவாளத்தில் படுத்து தூங்கிய 14 பேர் ரெயில் மோதி பலி; சொந்த ஊருக்கு சென்றபோது பரிதாபம்
1 min read
14 killed in train collision Pity on his return to thir hometown
8-5-2020
கொரோனா பரவல் காரணமாக சொந்த ஊருக்கு நடந்து சென்ற தொழிலாளர்கள் இரவு ரெயில் தண்டவளாத்தில் படுத்து தூங்கினார்கள். அவர்கள் மீது ரெயில் மோதியதில் 14 பேர் உடல் சிதறி இறந்து போனார்கள்.
மராட்டிய மாநிலத்தில் நடந்த இந்த துயர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
வெளிமாநில தொழிலாளர்கள்
வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் வெளிமாநிலங்களுக்கு சென்று வேலை செய்து பிழைப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படி வேலை செய்வோர் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.
முதலில் 15 நாட்களில் ஊரடங்கு முடிந்துவிடும் என்ற எண்ணி இருந்த தொழிலாளர்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு கவலையை அளித்துள்ளது. போக்குவரத்து இல்லாத காரணத்தால் பல இடங்களில் தொழிலாளர்கள் நடந்தே தங்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்கள்.
தற்போது ஒரு சில இடங்களுக்கு ரெயில் மற்றும் பஸ் போக்கு வரத்து இருந்தாலும் பெரும்பாலான இடங்களில் எந்த போக்கு வரத்து வசதியும் இல்லை. அதனால்தான் பலர் நடந்து செல்கிறார்கள்.
அப்படி சென்றவர்கள்தான் ரெயில் மோதி இறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் மராட்டிய மாநிலம் ஜல்கானாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தங்கி இருந்து வேலை செய்து வந்தனர். அவர்கள் ஊரடங்கு காரணாக தொழிற்சாலை மூடப்பட்டதால், சொந்த மாநிலத்துக்கு நடந்தே சென்றனர். அவர்கள் தண்டவாளப் பகுதி வழியே சென்றனர்.
கர்மாட் என்ற இடத்தில் வந்தபோது இரவு நேரமாகிவிட்டது. மேலும் உடல் அசதியும் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் ரெயில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கினார்கள்.
14 பேர் பலி
அவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தபோது இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் வந்தது. தண்டவாளத்தில் பலர் படுத்திருப்பதை ரெயில் என்ஜின் டிரைவர் பார்த்துவிட்டார். அவர் ரெயில்லை நிறுத்த முயற்சி செய்தார். ஆனால் அது முடியவில்லை.
அந்த சரக்கு ரெயில் தண்டவாளத்தில் படுத்திருந்தவர்கள் மீது மோதியது. இதில் 14 பேர் உடல் சிதறி இறந்தார்கள்.
5 பேர் மட்டும் படுகாயத்துடன் உயிர் பிழைத்தனர். அவர்கள் அவுரகாபாத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தகவல் அறிந்த ரெயில்வே மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.