ஒளிரும் உயிரிகளின் கதை!
1 min read
ஒளிரும் உயிரிகளின் கதை!
சிறுவயதில் மின்மினிப்பூச்சியைப் பிடித்து விளையாடிய அனுபவம் நம்மில் சிலருக்கு இருக்கும். அதை உள்ளங்கையில் வைத்து இன்னொரு கையின் விரல்களைக் குவித்து மின்னும் அதன் ஒளியைப் பார்த்திருப்போம். வண்டுகள் (Beetles) உலகத்தின் விந்தை மின்மினிப்பூச்சிகள். உயிரொளிர்வு (Bioluminescence) என்ற உயிரிகள் ஒளியை வெளியிடும் முறைக்குள் இவை அடங்கும்.
இது வெப்பம் இன்றி, ஒளி மட்டும் வெளியிடப்படும் குளிர் ஒளி (Cold Light) என்ற நிகழ்வால் ஏற்படுகிறது.
(ஜெல்லி) மீன்கள், பாக்டீரியாவில் சில வகை, கடலடி உயிரிகள் என உயிரொளிர்வை வெளியிடும் மற்ற உயிரினங்களைப் போல் மின்மினிப்பூச்சிகளின் ஒளியும் புரதங்களின் வேலைதான்.
பெரும்பாலான உயிரொளிர்வுப் புரதங்கள் புற ஊதாக்கதிர் போன்ற பிற ஒளி மூலங்களையோ, அயனிகள் கடத்தப்படுவதையோ நம்பியிருக்கும். ஆனால், மின்மினிப்பூச்சியின் ஒளிக்கு சில சிறப்புப் பண்புகள் உண்டு.
மின்மினிப்பூச்சியின் ஒளிக்கு லூசிஃபெரேஸ் (Luciferase) என்ற புரதம் காரணமாக விளங்குகிறது. தனிச்சிறப்பான வடிவமைப்பைக் கொண்ட இந்தப் புரதம், லூசிஃபெரின் (Luciferin) என்ற மூலக்கூற்றை தன் வடிவமைப்புக்குள் பொருத்திக்கொள்ளும்.
பின்னர் மெக்னீசியம், ஆக்ஸிஜன் வாயு ஆகியவற்றின் துணையோடு லூசிஃபெரினை வேதியியல் மாற்றத்துக்கு உட்படுத்தும். இந்த நிகழ்வில் துணைப்பொருளாக ஒளி வெளிப்படுகிறது. ஆனால், இது தன்னிச்சை நிகழ்வல்ல. அதற்கு உயிரினங்களின் ஆற்றல் மூலக்கூறாகக் கருதப்படும் அடினோசின் ட்ரைபாஸ்பேட் (Adenosine triphosphate – ATP) வேண்டும்.
இவை அனைத்தும் மின்மினிப்பூச்சிகளின் அடிவயிற்றின் இருக்கும் ஒளிபுகக் கூடிய பகுதியில் நிகழ்கின்றன.
மின்மினிப்பூச்சிகளின் புழுக்கள் அனைத்துமே ஒளியை உருவாக்கும். பூச்சி உண்ணும் விலங்குகளிடன் இருந்து தப்பிப்பதற்காக, மோசமான சுவையுடைய மூலப்பொருட்களைத் தன்னிடம் உற்பத்தி செய்து, ஒளியை அபாய விளக்கைப் போல் பயன்படுத்துகின்றன.
ஆனால், வளர்ந்த மின்மினிப்பூச்சிகளுக்கு அது இணை தேடுவதற்கான சங்கேதம். எவ்வளவு நேரத்துக்கு ஒருமுறை, எவ்வளவு விநாடிக்கு அவை ஒளிர்கின்றன என்பதைப் பொறுத்து, பெண் மின்மினிப்பூச்சிகள் தன் இணையைத் தேர்ந்தெடுக்கும்.