July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

பக்கவாதம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

1 min read

What to do in case of stroke?

“என்னாச்சுன்னு தெரியலைங்க. திடீர்னு இரண்டு நாளுக்கு முன் கை, கால் ஒருபக்கமா இழுத்துக்கிடுச்சு… இப்போ பேச வேற முடியல. ஞாபகம் மங்கிட்டே வருதுன்னு சொல்றாங்க. பிழைக்கிறதே கஷ்டமாம்” – இது போன்ற உரையாடல்கள் தற்போது சர்வசாதாரணமாக, கிராமம், நகரம் என எங்கெங்கும் கேட்கிறது. பக்கவாதம் எனப்படும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பு அதிகரித்துவருகிறது.

ஆனால், ஸ்ட்ரோக் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விழிப்புஉணர்வு மட்டும் மக்கள் மத்தியில் மிகமிகக் குறைவாக உள்ளது. இதனால், பலர் சரியான சிகிச்சை இன்றியே உயிரிழக்க நேரிடுகிறது.

பக்கவாதம் (ஸ்ட்ரோக்)…

மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, அல்லது ரத்தக் கசிவு ஏற்பட்டு மூளைக்கு ஆக்சிஜன் செல்லாதபோது, மூளை செயலிழப்பதுதான் ‘பிரெய்ன் அட்டாக்’ எனப்படும் ஸ்ட்ரோக். தமிழில், `பக்கவாதம்’. மூளைக்கு ரத்தம் செல்வது தடைப்பட்டால், மூளை செயல் இழந்து, மரணம் ஏற்படலாம்.

இளம் வயதில் ஸ்ட்ரோக்…

ஸ்ட்ரோக் பொதுவாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் வரும். இவர்கள் புகைபிடிப்பவராகவோ, மது அருந்துபவராகவோ, சர்க்கரை நோயாளியாகவோ, கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவராகவோ இருந்தால் ரிஸ்க் அதிகம். தவிர, 40 வயதுக்குள் ஸ்ட்ரோக் வருவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. உடலில், புரோட்டின் சி, புரோட்டின் எஸ் குறைதல், `ஹோமோசிஸ்டீன்’ என்னும் அமினோஅமிலம் அதிகரித்தல், ஆன்டித்ரோம்பின் – 3 குறைதல், கார்டியோலிபின் உடலில் தங்குதல் போன்றவற்றால் இளம் வயதில் ஸ்ட்ரோக் ஏற்படலாம்.

குழந்தைகளுக்கு ஸ்ட்ரோக்…

ஒருசில குழந்தைகள் வளரும்போது, அவ்வப்போது திடீர், திடீரெனக் கீழே விழுந்துவிடுவார்கள். உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், அடிக்கடி ஸ்ட்ரோக்குக்கான அறிகுறி தெரியும். சில குழந்தைகளுக்கு மூளைக்குச் செல்லும் அனைத்து ரத்தக் குழாய்களும் அவ்வப்போது சுருங்குவதால், இந்தப் பிரச்னை ஏற்படும். இந்தப் பிரச்னைக்கு ‘மொயா-மொயா’ நோய் என்று ஒரு பெயர் உண்டு.

பரிசோதனை…

உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை, கிரியாட்டினின், கொலஸ்ட்ரால், தைராய்டு அளவைப் பரிசோதிப்பதன் மூலம் ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை அறியலாம்.

சிகிச்சை என்ன?

ஸ்ட்ரோக் வந்தவுடன் உடனடியாக ஸ்ட்ரோக் யூனிட், அவசரசிகிச்சைப் பிரிவு வசதி உள்ள மருத்துவமனைக்குச் செல்வதுதான் சிறந்தது. மூன்றரை மணி நேரத்துக்குள் சென்றுவிட்டால், அவருக்கு `இன்ட்ராவீனஸ் த்ரொம்போலைசிஸ்’ எனும் சிகிச்சை அளிக்கப்படும். இதை அளித்துவிட்டால், ஸ்ட்ரோக் வந்தவர் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிட முடியும். நேரம் கடந்துவிட்டால், இந்த தெரப்பி பயன் அளிக்காது.

மூன்றரை மணி நேரத்தில் வர முடியாதவர்கள், ஸ்ட்ரோக் வந்த எட்டு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு வந்துவிட்டால், அவர்களுக்கு `இன்ட்ரா ஆர்டிரியல் த்ரோம்போலைசிஸ்’ அல்லது `மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி’ சிகிச்சை அளித்து, உயிரைக் காப்பாற்றலாம்.

சில சமயங்களில் பின்மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு, ஸ்ட்ரோக் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு, 12 மணி நேரத்துக்குள் இந்த தெரப்பி கொடுப்பதன் மூலம் உயிரைக் காப்பாற்ற முடியும்.

மருத்துவமனைக்கு 12 மணி நேரம் கழித்துச் சென்றால், பரிசோதனைக்குப் பிறகு மூளையின் வீக்கம் அளவிடப்படும்.

மூளையின் வீக்கம் அதிகமாக இருந்தால், `டீகம்ப்ரஸிவ் கிரேனியேக்டமி’ எனும் அறுவைசிகிச்சை செய்யப்படும். இதில், வீக்கம் உள்ள பகுதியில் மண்டைஓடு திறக்கப்பட்டு, வீக்கம் குறைந்த பின்னர், சில நாட்களில் அறுவைசிகிச்சை செய்தபின் மண்டைஓட்டை மூடிவிடுவார்கள். இவர்களுக்கு, கை, கால்கள், வாய் பழைய நிலைக்குத் திரும்ப வாய்ப்பு குறைவு. எனினும், உயிரைக் காப்பாற்ற முடியும்.

தடுப்புமுறைகள்…

மினி ஸ்ட்ரோக் வந்தவர்களுக்கு, அவரவர் உடல்நிலையைப் பொருத்து, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். சிலருக்கு, ஆஸ்ப்ரின் போன்ற ரத்தம் உறைவதைத் தடுக்கும் மாத்திரை அளிக்கப்படும். உடலில் ஹோமோசிஸ்டீன் அதிகமாக இருந்தால், ஃபோலிக்அமிலம் மற்றும் மெத்தில் கோபாலமைன் மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் சாப்பிட்டுவந்தால், ஸ்ட்ரோக் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்க முடியும்.

நவீன சிகிச்சைமுறைகள்

ஸ்ட்ரோக், மினிஸ்ட்ரோக் வந்தால் தற்போது உள்ள சில நவீன சிகிச்சைமுறைகள் மூலம் உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது. மினி ஸ்ட்ரோக் அல்லது ஸ்ட்ரோக் வந்தால், இதயச் செயல்பாட்டை ஆய்வுசெய்ய வேண்டும்.

பின்னர், கழுத்தில் உள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பு இருக்கிறதா என்பதை அறிய, டாப்ளர் பரிசோதனையும், சி.டி ஆஞ்ஜியோகிராபி பரிசோதனையும் செய்யப்படும். பரிசோதனையில், ரத்தக் குழாய்களில் 50 சதவிகிதத்துக்கு மேல் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டால், கரோட்டிட் என்டார்டெரக்டமி (Carotid endarterectomy) என்ற அறுவைசிகிச்சை மூலம் அடைப்பு நீக்கப்படும்.

ஒருவேளை, கழுத்தில் இருக்கும் ஏதாவது ஒரு ரத்தக் குழாய் முழுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களுக்கு மூளைக்கு வெளியே இருக்கும் ரத்தக் குழாயை எடுத்து, மூளைக்கு உள்ளே வைத்து பைபாஸ் அறுவைசிகிச்சை (Cerebaral bypass) செய்து, ஸ்ட்ரோக் வருவதைத் தடுக்க முடியும்.

மறுவாழ்வு சிகிச்சைகள்

ஸ்ட்ரோக் வந்த குறிப்பிட்ட நேரம் கடந்த பின்னர், சிகிச்சை மூலம் உயிர் காப்பாற்றப்பட்டாலும், சிலரால் படுத்த படுக்கையாக மட்டுமே இருக்க முடியும்.

அவர்களுக்கான வரம்தான் மறுவாழ்வு சிகிச்சைகள். பிசியோதெரப்பி மூலம் அவர்களை சக்கர நாற்காலியில் உட்காரும் அளவுக்கோ, தனியாக நடக்கும் அளவுக்கோ தொடர்ந்து பயிற்சி கொடுக்கப்படும். 60 சதவிகிதம் வரை மறுவாழ்வு சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு. மறுவாழ்வு சிகிச்சைகள் மூலம் தற்போது பலர் மீண்டுவருகிறார்கள். எனவே, நம்பிக்கை இழக்க வேண்டாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.