இந்தியால் ஒரே நாளில் கொரோனாவுக்கு 147 பேர் பலி; டெல்லி எய்ம்ஸ் டாக்டரும் இறந்தார்
1 min read
147 killed in India overnight- Delhi AIIMS doctor also died
24-5-2020
இந்தியாவில் ஒரே நாளில் 147 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர் கொரோனாவுக்கு பலியானார்.
கொரோனா
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய நிலவரத்தை தினமும் காலையில் மத்திய சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது.
அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி நிலவரத்தின் படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 6 ஆயிரத்து 767 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 868 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது கொரோனாவுக்காக 73 ஆயிரத்து 560 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவில் இருந்து கடந்த 24 நேரத்தில் 2 ஆயிரத்து 657 பேர் குணம் அடைந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்து 441 ஆக உயர்ந்துள்ளது.
147 பேர் பலி
இந்தயா முழுவதும் கொரோனாவுக்கு இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 147 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 867 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 867 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாநில வாரியாக வருமாறு:-
ஆந்திரா – 56
அசாம் – 4
பீகார் – 11
சண்டிகர் – 3
டெல்லி – 231
குஜராத் – 829
அரியானா – 16
இமாச்சல பிரதேசம் – 3
ஜம்மு-காஷ்மீர் – 21
ஜார்க்கண்ட் – 4
கர்நாடகா – 42
கேரளா – 4
மத்திய பிரதேசம் – 281
மகாராஷ்டிரா – 1,577
மேகாலயா – 1
ஒடிசா – 7
பஞ்சாப் – 39
ராஜஸ்தான் – 160
தமிழ்நாடு – 103
தெலுங்கானா – 49
உத்தரகாண்ட் – 2
உத்தரபிரதேசம் – 155
மேற்கு வங்காளம் – 269
மொத்தம் – 3,867
டாக்டர் சாவு
இந்தியாவில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரையும் கொரோனா தாக்கி வருகிறது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட போலீசார், சுகாதார பணியாளர்கள், டாக்டர்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஒரு சில டாக்டர்களும் பலியான சம்பவங்களும் நடந்து உள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) மூத்த மருத்துவரான பேராசிரியர் ஜிதேந்திர நாத் பாண்டே கொரோனாவால் இறந்துள்ளார்.
இவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் நுரையீரல் துறை இயக்குனராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார். கொரோனா காரணமாக இவர் உயிரிழந்ததை டெல்லியின் மூத்த மருத்துவர் டாக்டர் சங்கீதா ரெட்டி உறுதிப்படுத்தினார்.
இது பற்றி அவர் கூறும்போது, “எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் நுரையீரல் துறை இயக்குனரும், பேராசிரியர் டாக்டர் பாண்டே கொரோனாவுக்கு இறந்து போனார் . இதனால் நாங்கள் மிகவும் வருத்தமடைகிறோம். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.