June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

மானசீக மகள்-15 / தொடர்கதை / கண்ணம்பி ஆ.ரத்தினம்

1 min read

Bangalore 24/06/2008: Sarojadevi senior actor, announced for life time achievment award by the central government seen at her residence in Banglaore. Photo: K.Gopinathan , Bangalore.

Maanaseega Magal- Novel By Kannambi Rathinam

(முன்கதை- செல்வனும் ரோசியும் காதலித்து மதம் காரணமாக தோல்வி கண்டார்கள். அதன்பின் ரோசி பிரகாசை திருமணம் செய்தாள். அவர்களது மகன் பாரதி. செல்வன் நித்யாவை மணந்தான். அவர்களுக்கு மகிழ் என்ற மகள். பாரதியும் மகிழும் மனதார ஒருவரையொருவர் விரும்பினர்கள். அவர்கள் திருமணம் இனிதே நடந்தது. ஆனரல் அதன்பின் ஒரு புயல் வீசத் தொடங்கியது)

காலச்சக்கரம் உருண்டுகொண்டிருந்தது.
முதல் தீபாவளி வந்தது.
தலைத் தீபாவளி, தலைப்பிரசவம் என்றால் பெண்ணைப் பெற்றவர்களின் தலையில் கடன் சுமையை ஏற்றி புதுத் துணி மணிகள், நகைகள் வாங்கிக் கொண்டாடுவதுதானே பெரும்பாலான மாப்பிள்ளை வீட்டார் வழக்கம். கல்யாணத்தின்போது பெண்ணின் பெற்றோரின் இரத்தத்தை வரதட்சணையாகக் கறந்து எடுத்த பிறகு தொடர்ந்து சீதனம், சீர்வரிசை என்ற பெயரில் கறந்துகொண்டே யிருக்கிறார்கள்.
ரோசியும் பிரகாஷும் பெண்வீட்டுச் சீதனம், சீர்வரிசை எதையும் எதிர்பார்க்காமல் விருந்து விழாக்களுக்கு ஏற்பாடு செய்தனர். பெண் வீட்டிலேயே தீபாவளி கொண்டாடப்பட்டது. ஏழைகளுக்குத் துணிமணி, இனிப்புகள் வழங்கி இரு குடும்பத்தாரும் குதூகலமாகக் கொண்டாடினார்கள்.
பட்டாசு கொளுத்திப் பரவசம் அடைந்தார்கள்.
குடும்பத்திலுள்ள அனைவரின் கைகளிலும் வண்ணவண்ண மத்தாப்புகள் எரிந்து பொரிந்து அலங்கால ஒளி செய்துகொண்டிருந்தன.
தீ விபத்து இல்லாத தீபாவளியே கிடையாது என்ற நிலையில்தான் தமிழ்நாட்டில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மொட்டை மாடியில் வாணவேடிக்கை செய்வார்கள். கீழே குடிசை வீடுகள் பற்றிக்கொள்ளும். ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் வெடி கொளுத்துவார்கள். அடுத்த வீட்டு அடுப்பு பற்ற வைக்காமல் வயிறுகள் காய்ந்து கிடக்கும்.
ரோசி கொளுத்திவிட்ட தரைச் சக்கரம் தீப்பொறிகளைக் கக்கிச்சுழன்றது. எல்லாரும் கும்மாளச் சிரிப்புடன் கைகொட்டிச் சிரித்தார்கள். ஆனால் அந்தச் சிரிப்பு நீடிக்கவில்லை. ரோசி அணிந்திருந்த பட்டாடையில் நெருப்புப் பிடித்துக்கொண்டது. அலறியடித்துக்கொண்டு ரோசி ஓடினாள். செல்வன் பாய்ந்து சென்று நெருப்புப் பற்றிய பட்டுப் புடவையை கசக்கி அணைக்க முயன்றான். முடியவில்லை. உடனே ஆவேசமாக அவள் புடவையை அவிழ்த்து வீசிவிட்டு அவளைக் கட்டிப்பிடித்து தரையில் உருண்டான். தீ அணைந்தது. இருவரும் நெருப்புக் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருவரும் நெருப்புக்கு இரையாகாமல் உயிர் பிழைத்ததை நினைத்து எல்லாரும் கண்ணீர் சொரிந்தனர்.
“ரோசி தீக்கிரையாகியிருந்தால்…” என்ற நினைப்பு செல்வனை மேலும் மேலும் தாக்கி விம்மி விம்மி அழவைத்தது. “செல்வன் மீது நெருப்புப் பற்றியிருந்தால்…” என்ற எண்ணம் ரோசியைச் கசிந்து கசிந்து உருகி அழவைத்தது. அன்று முதல் இருவரும் உடன்பிறந்த அண்ணன் – தங்கை உணர்வைப் பெற்றுவிட்டார்கள். ரோசியைப் பார்க்காமல் செல்வனால் இருக்க முடியவில்லை. செல்வனைப் பார்க்காமல் ரோசியால் இருக்க முடியவில்லை.
இரு குடும்பமும் ஒரே வீட்டில் வாழலாமா என்றுகூட யோசித்தார்கள்.
ரோசி ஒரு யோசனை கூறினாள். “நான் உங்களோடு பழையது போல் பத்திரிகை அலுவலகத்தில் வேலைக்கு வந்துவிடுகிறேன்” என்றாள்.
“அதுவும் நல்ல யோசனைதான். நீ வந்தால் இதை விடவும் நன்றாகப் பத்திரிகை நடத்தலாம். அறிஞர்கள் மத்தியில் பேராதரவு பெற்று விளங்கும். பத்திரிகைக்கு மேலும் அமோக விற்பனைக்கு முயற்சி செய்யலாம்” என்றான் செல்வம்.
பழைய காதல்ஜோடி இப்போது அண்ணன் – தங்கை. இருவரும் இணைந்தே பத்திரிகை அலுவலகம் சென்றார்கள்.
எல்லா இடங்களிலும் நல்ல வாய்களும் உண்டு, நாற வாய்களும் உண்டல்லவா…
அலுவலகம் பழைய களைகட்டியது. முதலாளி மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் சில களைகள் அவர்களின் அன்புப் பயிருக்குக் களங்கம் கற்பித்தனர்.
மத்தியானம் இருவரும் இணைந்திருந்து சாப்பிடுவதை அழுக்கு மனம்கொண்டவர்கள் சந்தேகக் கண்களுடன் பார்த்தார்கள்.
வாயில் வந்தபடி வதந்திகளைப் பரப்பினார்கள்.
“கல்யாணம் பண்ணி கொஞ்ச முடியாததை கள்ளத்தனமா கொஞ்சுறாங்க” என்றார்கள்.
செல்வன் கார் ஓட்ட, அருகில் ரோசி அமர்ந்திருந்து போவதைக் கண்டு அவதூறு பேசினார்கள்.
தீ மெதுவாகப் பரவினாலும் வதந்தி வேகமாகப் பரவும் என்பார்கள். அதைப்போல் அது அக்கம் பக்கம், அங்கு இங்கு எல்லா இடங்களிலும் பரவி பிரகாஷ் காதுகளிலும் விழுந்தது. பாரதி – மகிழ் காதுகளையும் விட்டு வைக்கவில்லை.
குடும்பத்தில் குழப்பம் சூழ்ந்துகொண்டது. வேலை விஷயமாகவும் பத்திரிகைச் செய்திகள் விஷயமாகவும், தலையங்கம் விஷயமாகவும் இருவரும் ஸெல்போனில் வெகுநேரம் பேசிப் பரிமாறிக்கொள்ளும் செய்திகள்ள பிரகாஷ் மனதிலும் சந்தேக சபலத்தை உருவாக்கியது.
ரோசி எது பேசினாலும் பிரகாஷிடமிருந்து மௌனமே பதிலாக வந்தது. ஏன் இந்த மவுனம் என்பது அவளுக்கு விளங்கவில்லை. நடைப்பிணம் போல் ஆனாள். கணவனின் மௌன பாஷைக்கு அர்த்தம் என்ன என்று செல்வனிடம்
கேட்டாள்.
அன்று மாலையில் நிர்வாக இயக்குநர் செல்வனையும் ரோசியையும் தனது அறைக்கு அழைத்தார்.
“செல்வன் – ரோசி நான் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சி அடையாதீங்க.ரோசியின் கணவர் பிரகாஷ் நேற்று எனக்கு போன்பண்ணி ரோசி இனி வேலைக்கு வரமாட்டாள்” என்று சொன்னார்” என்றார்.
அதைக் கேட்டு செல்வன் – ரோசி இருவரும் மனம் இடிந்து உட்கார்ந்திருந்தார்கள்.
தொடர்ந்து நிர்வாக இயக்குநர் பேசினார்.
“பாலுக்கும் சுண்ணாம்புக்கும் வித்தியாசம் தெரியாத உலகத்துல உங்களைப் போல் பரிசுத்தமானவங்க வாழ்றது ரொம்ப கஷ்டம். உங்க ரெண்டு பேரையும் பத்தி சிலர் தப்பா பேசுறாங்க” என்று சொன்னது இருவர் காதுகளிலும் திராவகம் ஊற்றியது போல் எரிந்தது.
செல்வன் தனியாகவும் ரோசி தனியாகவும் வீடு வந்து சேர்ந்தனர்.
புதுக்குழப்பம் புகுந்துகொண்டு இரு குடும்பங்களுக்கும் புகைமூட்டம் கொடுத்தது.
ரோசி சாய்வு நாற்காலியில் மனம் சோர்ந்து சாய்ந்திருந்தாள்.
பிரகாஷ் அங்கு வந்தார். “ரோசி… செல்வனும் நீயும் அண்ணன் – தங்கையாகவே ஆகிட்டீங்க. அது எனக்குத் தெரியும். ஆனால் இந்த ஊருக்குத் தெரியல்லியே. இந்த ஊர் மக்களின் கண்கள் மனிதக் கண்களல்ல. சுனாமிக் கண்கள். குடும்பங்கள்ல சூறாவளி ஏற்படுத்துற கண்கள். நமமளைப் போன்ற பரிபக்குவமானவங்க இந்த ஊர்ல வாழ்றது ரொம்ப கஷ்டம். அதனால நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். என்னுடைய ஓவியங்களுக்கெல்லாம் வெளிநாட்ல நல்ல வரவேற்பு இருக்கு. ஒரு கம்பெனில என்னைக் கூப்பிட்டிருக்காங்க. இந்த ஊர்ல இருந்து குப்பையைக் கிளறி, நாற்றத்தையே சுவாசிச்சு நோயாளி ஆகிறதவிட வெளிநாடு போய் அங்கே பிரச்சினை இல்லாம வாழலாம்னு நினைக்கிறேன்” என்று சொல்லி முடித்தார்.
சுருங்கிப்போன ரோசியின் முகத்தை இந்தச் சொற்கள் மேலும் சுருங்கவைத்தன.
வெளிநாடு போவதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்தது.
செல்வனின் மனம் உடைந்து சுக்குநூறானது. அவனுக்கு வேலையில் கவனம் செலுத்தமுடியவில்லை. நித்யா அவனை ஆறுதல்படுத்தினாள். பாரதி – மகிழ் இருவரும் வெளிநாடு செல்ல உடன்பட்டார்கள். ரோசியையும் மகள் மகிழையும் பிரிந்திருப்பதை நினைக்கும்போது செல்வனின் இதயம் வெற்றிடமானது. நித்யாவின் இதயம் நீறாகிப்போனது.
விமான நிலையத்துக்குச் சதையுள்ள எந்திரம்போல் எல்லாரும் வந்து சேர்ந்தார்கள். இந்திய மண்ணில் இனி எப்போது காலூன்றப்போகிறோம் என்று ரோசியின் இதயம் போராடியது. தூரத்தில் நின்று ரோசியின் கண்கள் செல்வனை விழுங்கின. செல்வனின் விழிகளில் ரோசியின் பிம்பம் விழுந்து மறைந்தது.
விமானம் தரையில் ஓடி மேலே கிளம்பியது. சந்தேகப் பேய்களால் தங்களுக்கு நேர்ந்த நிலையை நினைத்து எல்லாருடைய இதயமும் உருண்டுபுரண்டது.
மகளைப் பிரிந்திருக்க முடியாமல் செல்வனும் நித்யாவும் கரைந்தார்கள். ரோசியின் நினைப்பு வறுத்தெடுத்தது.
இன்டர்நெட்டில் இந்தியாவும் அமெரிக்காவும் சந்தித்துக் கொண்டன. இரு குடும்பத்தினரும் கண்ணாடித் திரையில் கண்டு பேசிக்கொண்டார்கள். ஆனால் ரோசி மட்டும் கேம்ரா முன் தோன்ற மறுத்துவிட்டாள். அவளை ஆக்கிரமித்த வெறுப்பு அவளை வாழ்க்கையின் விரக்திமுனையில் கொண்டு நிறுத்தியது.
காலத்தை மட்டும் பிடித்து நிறுத்த முடிவதில்லையே…
பூமிப்பந்து உருண்டு கொண்டேயிருந்தது.
ரோசியின் எண்ணம் செல்வனின் உள்ளத்தில் திரண்டு கொண்டிருந்தது.
ரோசியை நேரில் காண பாசவெறி கொண்டான். வலைத்தளத்தில் பார்த்துவிடத் துடித்தான். ரோசிக்கு அபிநய சரஸ்வதி சரோஜாதேவியின் நடை உடை பாவனைகள், சாயல் எல்லாம் இருக்கும். அதனால் ரோசியை சந்தோசமாகப் பார்க்கும் ஆசையில் சரோஜாதேவி பாடல் காட்சிகளை, சரோஜாதேவி படங்கள் சி.டிக்களை வாங்கி வந்து போட்டுப் பார்த்தான். நிஜத்திற்குப் பதிலாக நிழலில் தனது இதயத்தின் வெப்பத்தைத் தணித்துக்கொண்டிருந்தான். நாளடைவில் சரோஜாதேவியை உடன்பிறந்த சகோதரிபோல் பாவிக்கத் தொடங்கிவிட்டான்.
சரோஜாதேவி நடித்த பழைய படக்காட்சிகள், பாடல் காட்சிகளெல்லாம் செல்வனை ஆறுதல்படுத்திக்கொண்டிருந்தன. ஒரு நாள் நெடுநேரம் தூக்கம் வராமல் தவித்துக்கொண்டிருந்தான். ரோசியின் நினைவு அவன் கண்களில் நிரம்பி விழியோரங்களை வடிகால்களாக்கிக்கொண்டிருந்து. செல்வனின் பாசக்கொதிப்பு சரோஜாதேவியைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும்போல் தூண்டிக்கொண்டேயிருந்தது.
சரோஜாதேவி முகவரிக்கு ஒரு கடிதம் எழுதினான். தனக்கு நேர்ந்த சோதனைகள், தவிப்புகளையெல்லாம் வரலாறாக வரைந்து அனுப்பினான். நேரில் சந்திக்க ஆசை என்பதையும் குறிப்பிட்டிருந்தான். பதில் வருமா, வராதா என்று எதிர்நோக்கி
யிருந்தான். பதில் வந்தது.
“உங்கள் வாழ்க்கையின் அனுபவங்கள் விசித்திரமாக இருக்கிறது. உங்களை என் சகோதரனாக ஏற்றுக்கொண்டேன். உங்கள் பரிபக்குவமான மனம்போல் ஒவ்வொருவருக்கும் இருந்தால் இந்த நாடு மட்டுமல்ல, உலகமே சொர்க்கமாக மாறிவிடும். மனிதர்கள் முதுகில் நரக மூட்டைகளையே சுமந்து வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். நீங்கள் வித்தியாசமான பிறவி. உங்களை அறிமுகப்படுத்தி பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்” என்ற பதிலைப் படித்து செல்வனின் உள்ளத்தில் ஒரு புது உயிர் நுழைந்துவிட்டது. புத்துணர்ச்சி பெற்றான். நித்யாவிடம் சொன்னான். இறுக்கமாகவே இருந்த செல்வனின் முகத்தில் ஒளியைக் கண்டு நித்யா ஆனந்தத்தின் எல்லைக்கே போய்விட்டாள்.
பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டம் நடந்தது. செல்வன் வந்ததும் அவனது கைகுலுக்கி அமரச் செய்தார் அபிநயசரஸ்வதி சரோஜாதேவி. நித்யாவையும் வரவேற்றுத் தன் அருகில் உட்காரும்படி கேட்டுக்கொண்டார்.
பத்திரிகையாளர்கள் வந்தனர். செல்வனைப் பத்திரிகை யாளர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். என் நடிப்பையும் அழகையும் வர்ணனை செய்து ரசிகர்கள் கடிதம் எழுதுவார்கள். ஆனால் என்னை உடன்பிறந்த சகோதரியாக நினைத்து டி. வி.யில் – சி.டி. பிளேயரில் நான் நடித்த படங்களையும் பாடல் காட்சிகளையும் போட்டுப் பார்த்து, கண்கள் கனிந்து கலையை ஒரு கோவிலாகவும் என்னைத் தெய்வமாகவும் நினைத்த செல்வன் ஒரு அதிசயப்பிறவி. அவரது வாழ்க்கை அனுபவம் வித்தியாசமானது. எத்தனையோ கற்பனைக் கதைகள் திரைக்கதையாக, டி.வி. சீரியலாக வார்க்கப்படுகின்றன. செல்வனின் நிஜவாழ்க்கையின் அனுபவங்கள் சமுதாய நல்லுணர்வுக்கு மிகவும் தேவையானவை. செல்வனின் வாழ்க்கையை ஆதாரமாக வைத்து ஒரு படம் பண்ணவோ, அல்லது
டி. வி.சீரியல் எடுக்கவோ தயாரிப்பாளர்கள் முன்வரவேண்டும் என்று பத்திரிகையாளர் மூலமாகக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசிவிட்டு சரோஜாதேவி அமர்ந்தார்.
இந்தச் செய்தி மறுநாள் காலைப் பத்திரிகையில் வெளியானது.
செல்வனின் வாழ்க்கை அனுபவங்களைக் கேட்க அதாவது கதை கேட்க பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அழைத்தனர்.
ஆனால் புகழ்பெற்ற ஒரு இயக்குநரிடம் சொன்னதுமே கதை ஏற்றுக்கொள்ளப்பட்டது. ‘அனுபவக் கோடுகள்’ என்று படத்திற்கு பெயர் சூட்டப்பெற்றது. திரைப்படம் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள பிரகாஷ், ரோசி, பாரதி, மகிழ் எல்லாரும் அமெரிக்காவிலிருந்து விமானத்தில் வந்து இறங்கினார்கள்.
செல்வனும் நித்யாவும் விமான நிலையம் போயிருந்தார்கள். மகிழ் ஓடிவந்து செல்வனையும் நித்யாவையும் கட்டிப்பிடித்து முத்தமழை பொழிந்தாள். ரோசி அண்ணா என்று ஓடிவந்து செல்வனிடம் ஒட்டிக்கொண்டாள். பிரகாஷ்-பாரதி கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தது.
(மானசீக மகள் நிறைவடைந்தாள்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.