கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி
1 min read
29.5.2020
நாமக்கல் அருகேயுள்ள தூசூர் கொடிக்கால்புதூரை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ராமன் (35). இவரது மனைவி சத்யா (29). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சத்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ராமமூர்த்தி (36) என்பவருக்கும் இடையே, கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த ராமன் மனைவி சத்யாவை கண்டித்துள்ளார். இருப்பினும் சத்யா தனது கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 21ம் தேதி ஏற்பட்ட தகராறில், சத்யாவை ராமன் அடித்து உதைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சத்யா, தனது கள்ளக்காதலனை இரவு 11 மணிக்கு வீட்டுக்கு வரவழைத்தார். பின்னர், இருவரும் சேர்ந்து தூங்கிக்கொண்டிருந்த ராமனை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். மறுநாள் காலை, ராமன் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்ததாக உறவினர்களை நம்ப வைத்து, அவரது உடலை எரித்து விட்டனர். இதுகுறித்து நாமக்கல் போலீசாருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. கொலை செய்யப்பட்ட ராமனின் தம்பி லட்சுமணனை அழைத்து போலீசார் விசாரித்த போது, சில தகவல்கள் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து போலீசார் ராமமூர்த்தியையும், சத்யாவையும் தனித்தனியாக விசாரித்த போது, அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டனர். இதை தொடர்ந்து இருவரையும் நாமக்கல் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் நேற்று கைது செய்தார். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலை கண்டித்த கணவனை மனைவியும், கள்ளக்காதலனும் சேர்ந்து கொலை செய்து நாடகமாடிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.